ETV Bharat / state

பண்ணாரி வனத்தில் 3 நாட்களாக உயிருக்குப் போராடிய தாய் யானை உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 3:36 PM IST

பண்ணாரி வனத்தில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிறிழந்தது
பண்ணாரி வனத்தில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய தாய் யானை சிகிச்சை பலனின்றி உயிறிழந்தது

Mother elephant dead in Erode: உடல் நலக்குறைவால் தாய் யானை உயிரிழந்ததையடுத்து, அதன் 2 மாத குட்டி யானை பண்ணாரி வனப்பகுதிக்குள் பிற யானை கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

ஈரோடு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தாய் யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், வனத்துறையால் பிரித்து பராமரிக்கப்பட்டு வந்த அதன் 2 மாத குட்டி, பிற யானைக் கூட்டத்துடன் நேற்றிரவு பண்ணாரி வனப்பகுதிக்குள் சேர்க்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் காரணமாக யானைகள் தீவனம், தண்ணீர் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் பண்ணாரி கோவிலில் இருந்து பவானிசாகர் செல்லும் சாலையின் அருகே, காட்டில் இருந்து குட்டியுடன் வந்த தாய் யானை ஒன்று திடீரென காட்டில் மயங்கி விழுந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த தாய் யானை அருகே குட்டி யானை பரிதாபமாக அங்கும் இங்கும் உலாவுவதைக் கண்ட வாகன ஓட்டிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் சுதாகர், வனச்சரக அலுவலர் கே.ஆர்.பழனிச்சாமி ஆகியோர், யானையின் உடலை ஆய்வு செய்தனர்.

பின்னர் வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நோயால் பாதிக்கப்பட்ட 40 வயதுள்ள தாய் யானைக்கு, அதே இடத்தில் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தனர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை பெல்ட்டில் கட்டி தூக்கி நிறுத்தி, அதனை நடக்க வைக்க முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

மூன்று நாட்களாக தாய் யானைக்கு குளுக்கோஸ், பசுந்தழைகள் ஆகியவற்றை தீவனமாக அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். பிறந்து 2 மாதமே ஆன குட்டி யானையை தனியாக பிரித்து பராமரித்து வந்த வனத்துறை, நேற்றிரவு பண்ணாரி வனத்தில் பிற யானைக் கூட்டத்துடன் அதனை சேர்த்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குட்டி யானையின் நிலை குறித்து ட்ரோன் மூலம் வனத்தறையினர் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தாளவாடி அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம்.. போக்குவரத்து பாதிப்பால் பொதுத்தேர்வு மாணவர்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.