ETV Bharat / state

ஸ்ரீமுஷ்ணம் விவகாரம்; மோதலில் பெண் உயிரிழந்தது தொடர்பாக மேலும் மூவர் கைது! - Cuddalore Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 4:35 PM IST

Updated : Apr 24, 2024, 4:48 PM IST

Cuddalore Issue
Cuddalore Issue

Cuddalore issue: கடலூரில் நடைபெற்று முடிந்த தேர்தல் நாளன்று இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் மேலும் 3 நபர்களை கைது செய்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அன்று மாலை 06.00 மணியளவில், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் (அதே ஊரைச் சேர்ந்தவர்) மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர், ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே இரு தரப்பிரணருக்கும் இடையே கடந்த 2021ஆம் ஆண்டில் பக்கிரிமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு, கலைமணி, ஜெயக்குமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் அன்றைய தினம், ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெய்சங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும், கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் மறுபுறமும் இருக்க, அப்போது கலைமணி மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதற்கான நீண்ட நாள் கோரிக்கையை ஜெயக்குமார் ஏற்க மறுத்ததற்காக இருபுறமும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு, பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜெயக்குமார், அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய குற்ற எண் 96/2024 ச/பி 147, 148, 294(b), 323,324, 506(ii) மற்றும் 302 பிரிவு 4 பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 11 கண்ணுற்ற சாட்சிகளையும், 5 ஊர்காரர்கள் சந்தர்ப சாட்சிகளையும் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தும், மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 10 நபர்களில் கலைமணி ரவி, அறிவுமணி, மேகநாதன் மற்றும் தீபா ஆகிய 5 நபர்களை ஏப்ரல் 20 அன்று பிற்பகல் கைது செய்தும், சம்பவத்தில் பயன்படுத்திய சவுக்குத் தடிகளைக் கைப்பற்றியும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கின் புலன் விசாரணையிலிருந்து, இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளை கேலி கிண்டல் செய்ததும், கலைமணிக்கும் ஜெயகுமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பதும், இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெரிய வந்துள்ளது.

இது தவிர வேறு எந்த காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று நபர்களான பாண்டியன், அருள்செழியன் மற்றும் ராஜா ஆகியோர் நேற்று (ஏப்ரல் 23) கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரே தங்களது புகாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்த தகராறு தான் கோமதியின் இறப்பிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்கள். முதற்கட்ட விசாரணையிலும் இதுவே உண்மை என தெரிய வந்துள்ளது.

மேலும், எஞ்சிய 2 பேரை கைது செய்தும், காயம் அடைந்தவருக்கான காயச்சான்றிதழ் பெற்றும், இறப்பிற்காக காரணம் குறித்த மருத்தவ அறிக்கை பெற்றும், அனுமதிக்கப்பட்ட புலன் விசாரணை காலத்திற்குள் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் கடலூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?" - இளையராஜா விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Ilayaraja Case

Last Updated :Apr 24, 2024, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.