ETV Bharat / state

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 3:45 PM IST

Updated : Feb 19, 2024, 4:46 PM IST

Etv Bharat
Etv Bharat

Kalaignar Convention Centre: தமிழக சட்டசபையில் 2024 - 2025 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நவீன வசதிகளுடன் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.

அதில் பொதுப்பணித்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு பகுதியில் சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச கண்காட்சிகள் பன்னாட்டுக் கூட்டங்கள் நடத்திடும் வகையில், உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் (Kalaignar Convention Centre) நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

இந்த பன்னாட்டு அரங்கத்தில் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10 ஆயிரம் நபர்கள் பார்வையிடும் வசதிகொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகள், அரங்கம் ஆகிய வசதிகளுடன் அமையவுள்ளது. இந்தப் பன்னாட்டு அரங்கம் சிங்காரச் சென்னையின் நவீன அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்.

தலைநகர் டெல்லியில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர பரப்பளவில் விருந்தினர்கள், அலுவலர்கள் மற்றும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்குவதற்கு உரிய வசதிகளுடன் திராவிடக் கட்டடக்கலை மரபில் வடிவமைக்கப்பட்டு வைகை - தமிழ்நாடு இல்லம் புதிதாகக் கட்டப்படும்.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைந்துள்ள வளாகத்தில், தமிழர்களின் தொன்மையான வரலாறு, பண்பாடு மற்றும் கலைகளை ஒரே இடத்தில் அரங்கேற்றம் செய்யும் வகையில், நாட்டுப்புறக் கலைகள், சிற்பங்கள், கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள், தமிழ்நாட்டின் மரபுசார் தாவரங்களை உள்ளடக்கிய பசுமைப் பரப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இந்த வளாகம் தமிழ்ப் பண்பாட்டின் முகவரியாகத் திகழும் வண்ணம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

புராதனக் கட்டடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளுக்கென இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம், திருவையாற்றில் உள்ள நூற்றாண்டு பழமையான திருமண மண்டபம், சென்னை சேப்பாக்கத்தில் இயக்குநரக அலுவலகம் மற்றும் ஈரோடு கொடுமுடியில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் பழமையான பயணியர் விடுதி, சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி புராதனக் கட்டடக் குவிமாடம் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

பல்வேறு அரசு அலுவலகங்கள் கல்லூரிக் கட்டடங்களின் வடிவமைப்பில் உலகளவில் வளர்ந்து வரும் நவீன போக்குகளையும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலை மரபுகளையும் கருத்திற்கொண்டு, புதிய கட்டட வடிவமைப்புக் கொள்கை ஆவணம் (Future Spaces) விரைவில் வெளியிடப்படும். கட்டட வடிவமைப்பில் அழகியல், நவீனத் தொழில்நுட்பம், பசுமை கட்டுமானம் பணிச்சூழலில் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்திடத் தேவையான வழிமுறைகள் அடங்கிய கொள்கையாக இது அமைந்திடும்.

இதையும் படிங்க: திண்டுக்கல், திருவாரூர், சிவகங்கையில் தொழிற்பேட்டைகள்: பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

Last Updated :Feb 19, 2024, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.