ETV Bharat / state

சின்னம் விவகாரம்; “தமாகா கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது?” - அமைச்சர் பொன்முடி சரமாரி கேள்வி! - minister ponmudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 3:22 PM IST

Updated : Mar 29, 2024, 3:33 PM IST

MINISTER PONMUDI
MINISTER PONMUDI

Election Symbol issue: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிடுமே என்ற அச்சத்தில் சின்னங்களை வழங்கும் விஷயத்தில் பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலமாக காய்களை நகர்த்தி வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், இந்தியா கூட்டணியின் கட்சியின் சார்பில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடவுள்ளார். இவர்கள் இருவரையும் ஆதரித்து, விழுப்புரம் வி.சாலையில் ஏப்.5ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையாற்றவுள்ளார்.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாளைய தினம் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கட்சியின் சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே, நாளை காலை 11 மணியளவில் இந்த பிரச்சாரமானது நடைபெறவுள்ளது. மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, விழுப்புரம் வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியத் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்குவது தொடர்பாக வெளியிட்ட அறிவுறுத்தலின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

மேலும், தமாகா கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்களா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்து உள்ளார்களா? ஆனால் ஜி.கே.வாசன் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான், தினகரனின் அமமுக கட்சிக்கும் குக்கர் சின்னம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

சின்னம் வழங்குவது தொடர்பாக பல கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது குறித்து மக்களும் அறிவர். எங்கே இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடுமோ, முதலமைச்சர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி வெற்றி பெற்று விடுமோ என்கிற அச்சத்தில், சின்னங்களை வழங்கும் விஷயத்தில் பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலமாக காய்களை நகர்த்தி வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை கேளிக்கை விடுதி விபத்து விவகாரம்; கேளிக்கை விடுதி மேலாளர் கைது!

Last Updated :Mar 29, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.