ETV Bharat / state

முருகன் லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரிய வழக்கு: திருச்சி ஆட்சியருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 2:02 PM IST

முருகன் லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரிய வழக்கு
முருகன் லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரிய வழக்கு

murugan passport case: ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட முருகன், பாஸ்போர்ட் பெற ஏதுவாக இலங்கை தூதரக அனுமதியை பெற்று தர திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், லண்டன் செல்ல பாஸ்போர்ட் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் மனைவி நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையை சேர்ந்த முருகன் என்கிற ஶ்ரீகரன் படிப்பிற்காக 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991 ஜூன் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டோம். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் 24 பேருக்கு மரணதண்டனை விதித்து 1998ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றமும் 1999ம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு கடந்த 2000ம் ஆண்டு தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், கணவர் முருகனின் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் மாற்றி 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2018ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தங்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி 2022ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டோம்.

ஆனாலும், சிறப்பு முகாமில் கணவர் முருகன் கடந்த 2022ம் ஆண்டிலிருந்து அடைக்கப்பட்டுள்ளார். உரிய அனுமதி இல்லாமல் வெளிநாட்டு குற்றவாளிகளை முகாமில் இருந்து வெளியே அனுப்ப முடியாது என மத்திய அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. லண்டனில் பணி புரிந்து வரும் தனது மகள் மெஹ்ராவை கடந்த 16 ஆண்டுகளாக பார்க்கவில்லை.

அதனால், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்த நிலையில், ஜனவரி 30ம் தேதி நேர்காணலுக்காக அழைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய நேர்காணல் முடிந்த நிலையில், நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்காததால் கணவர் முருகன் இலங்கை துணை தூதரகம் அழைத்தபோது நேரில் ஆஜராக முடியவில்லை. முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கனவே 1 மாதத்தில் 2 பேர் இறந்துள்ளதால், தன்னுடைய கணவருக்கு எதுவும் நடக்கும் முன், இருவரும் மகளுடன் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எனவே தன் கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், முருகனை எப்போது வேண்டுமானாலும் இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்புடன அழைத்து செல்ல தயாராக இருப்பதாக கூறினார்.

எப்போதும் அழைத்து செல்லலாமா அல்லது முன்கூட்டியே அனுமதி பெற்று அழைத்துச் செல்ல வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் அழைத்து செல்லலாம் என கூறினார்.

இதனையடுத்து, முருகன் அழைத்துச் செல்லப்படும் நாளில் ஒருவேளை அவரால் நேர்காணலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால் அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என தெரிவித்த நீதிபதிகள், நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறு அனுமதி பெற்ற தகவலை வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கணவருக்காக தொடங்கிய ஆட்டோ பயணம்.. மகளிர் தினத்தில் மிளிரும் தென்காசி மர்ஜான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.