ETV Bharat / state

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 10:33 PM IST

Dravida Viduthalai Kazhagam
திராவிடர் விடுதலைக் கழகம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்

Dravida Viduthalai Kazhagam: "சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்" என்ற தலைப்பில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 'சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்' என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது.

இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(பிப்.26) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி, அடிப்படை போராட்ட உரிமைகளை நிறுத்தி வைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வரும் மார்ச் 3ஆம் தேதி, சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சுதர்சன் சேது; இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.