ETV Bharat / state

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதைத் தமிழ்நாடு அரசு செலவினமாகக் கருதக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:15 PM IST

Madurai High Court
Madurai High Court

Library Books: 2020-2023 ஆண்டுகளுக்கான புத்தகங்களை 6 மாதத்திற்குள் அரசு கொள்முதல் செய்து அதனை நூலகங்களுக்கு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: உள்ளாட்சி அமைப்புகள் வசூல் செய்யும் நூலக வரியை நூலகத்துறைக்கு ஒப்படைத்து, நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்க உத்தரவிடக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தை ராஜ செல்வன் என்பவர் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கும் போது நூலக வரியும் சேர்த்து வசூலிக்கின்றன. ஒரு ரூபாய்க்கு 5 பைசா என்றிருந்த நூலக வரி, 1992-ல் பத்து பைசாவாக உயர்த்தப்பட்டது. நூலக வரியாக வசூலிக்கப்படும் தொகையை உள்ளாட்சி அமைப்புகள் நூலகங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், மதுரை மாவட்ட மைய நூலகத்துக்கு மதுரை மாநகராட்சி ரூ.7 கோடி நூலக வரிப்பாக்கி வைத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 67 கிளை நூலகங்கள், 69 கிராமப்புற நூலகங்கள் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன.
இந்த நூலகங்களில் 130 பணியாளர்கள், 50 தினக்கூலிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நூலக வரியைச் செலுத்தாததால் நூலகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.

புதிய புத்தகங்கள் வாங்க முடிவதில்லை. பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்க முடிவதில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மாதாந்திர மின்கட்டணம், பராமரிப்பு, தினசரி பத்திரிகை வாங்குவது, மரச்சாமான்கள் வாங்குவது என அனைத்துப் பணிகளும் தடைப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்த நூலக வரியை நூலகத்துறையிடம் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்படவில்லை. எனவே நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கவும், உள்ளாட்சி அமைப்புகள் வசூலித்த நூலக வரியை நூலகத்துறைக்கு வழங்க உத்தரவிடக்கோரி" மனு செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, "நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதைச் செலவினமாகக் கருதக்கூடாது. அறிவு வளர்வதற்கான முதலீடாகப் பார்க்க வேண்டும்.

நூலகங்களில் நிரம்பும் புத்தகங்கள் தான் வளமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும். நவீனக் காலத்தில் இன்றைய இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைச் செய்வது அவசியம். தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கும் நூலக வரியை நூலகத்துறைக்கு முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தாலே தமிழகத்தில் அனைத்து நூலகங்களும் போதுமான அடிப்படை வசதிகளோடு செயல்படும்.
2020-2023 ஆண்டுகளுக்கான புத்தகங்களை 6 மாதத்திற்குள் அரசு கொள்முதல் செய்து அதனை நூலகங்களுக்கு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 5,765 கீழடி அகழாய்வுப் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.