ETV Bharat / state

பழனி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்; சிறப்பு பட்டாலியன் காவல்துறையை பணியமர்த்த உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 9:17 AM IST

Palani temple encroachment issue
Palani temple encroachment issue

Palani temple encroachment: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில், பழனி கிரிவீதியில் கண்காணிப்பு செய்து புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக பாதுகாப்புக்காக சிறப்பு பட்டாலியன் போலீசாரை பணி அமர்த்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், "பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாகக் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. தற்போது இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் நேற்று செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பழனி கிரிவலப்பாதையில் வாடகை கொடுத்துக் கடை வைத்திருந்த 51 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கு நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. மேலும் புலிப்பாணி மடம் அருகே உள்ள சில கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தம் வழங்கும் இடங்களில், இலவச குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது" என வாதிட்டார்.

இதையடுத்து வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், "நகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை தொடர்ந்து பழனி கிரிவீதியில் கண்காணிப்பு செய்து புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கோரும் கூடுதல் 82 போலீசாரை, சிறப்பு பட்டாலியன் படையிலிருந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும், புலிபாணி ஆசிரமத்தைச் சுற்றி உள்ள பகுதிகள், சன்னதி தெரு, வையாபுரி கால்வாயை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்" எனவும் தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்கு; இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.