ETV Bharat / state

மதுரை இசக்கி வழக்கு; சாத்தான்குளம் வழக்கை மேற்கோள்காட்டிய உயர் நீதிமன்றக்கிளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 6:01 PM IST

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

Lockup Murder Case: கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் சிறையில் இருக்கும்போது உயிரிழந்த இசக்கியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், அவரது குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த ஜெயப்பாண்டி என்பவர், கடந்த 2014, ஜூலை 11 அன்று கொலை செய்யப்பட்ட வழக்கில், எனது கணவர் இசக்கியை கடந்த 2014 ஜூலை 13ஆம் தேதி இரவு, அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின், அன்றைய தினம் முதல் அதே ஆண்டு ஜூலை 15 வரை காவல் துறையினர் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.

அதன் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 21 அன்று சிறையில் இருந்த எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. காவலர்கள் தாக்கியதால்தான் எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனவே, எனது கணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, “கடந்த 2016-2017 மற்றும் 2011-2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கைது செய்யப்பட்டவர்கள், விசாரணையின்போதோ அதற்கு பிறகு சில நாட்களில் உயிரிழந்து உள்ளனர். விசாரணையின்போது காவலர்கள் கடுமையாக தாக்குவதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு இருவரும் உயிரிழந்த பிறகும், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரரின் கணவர் இசக்கி உயிரிழந்தது தொடர்பாக, அவரது குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்.

உயரதிகாரிகளின் ஒப்புதலுக்காக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் காத்திருக்கத் தேவையில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் 4 ஆண்டுகாலம் விசாரணை தாமதமாகி உள்ளது. எனவே, இந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்திய காவலர்கள் மீதும், விசாரணையை தாமதப்படுத்த காரணமானவர்கள் மீது தமிழக காவல் துறைத்தலைவர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் லட்டு தயாரிக்கும் இட மாற்ற விவகாரம்; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.