ETV Bharat / state

4 வழிச்சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில் விதிமீறல்.. நடவடிக்கை எடுக்க மதுரைக்கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 9:41 AM IST

madurai bench order to take action against all those involved in sand quarry violations
மணல் குவாரியில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு

Madurai Bench Order: நான்கு வழிச்சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில், விதிமீறலில் ஈடுபட்டோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலை பணிக்காக உரிமம் வழங்கப்பட்ட மணல் குவாரியில் நடைபெற்ற விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சேவுகன், பாரதிராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், "மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பழையனேந்தல் கண்மாய், செட்டிகுளம் கிராமத்திற்கு உள்பட்ட கள்ளத்தி கண்மாய் ஆகிய நீர்நிலைப் பகுதிகளிலும், கொட்டகுடி கிராமத்துக்கு உள்பட்ட நிலங்களிலும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைக்கப்பட்டு மண் அள்ளப்படுகிறது.

இதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்குச் செல்லும் சூழலும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது சுற்றுப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், இவ்வாறு சட்டவிரோதமாக அதிக அளவில் மணல் திருடப்பட்டு வருவதால், அரசுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் குவாரி அமைத்து மண் அள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, அதனை விசாரணை செய்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், "இந்த வழக்கை கடந்த அக்டோபர் 2023-இல் விசாரித்து, குவாரி நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தோம். கனிமவளத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தோம்.

அதன்பேரில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், கொட்டகுடி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 38 ஆயிரத்து 858 கியூபிக் கன மீட்டர் அளவுக்கு கிராவல் மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலைக்காக கிராவல் மண் எடுக்க குவாரிக்கு வழங்கிய உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டரின் அறிக்கையின் மூலம் மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்துள்ளன. மேலும், இந்த முறைகேடு அந்த பகுதி வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி நடக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொறுப்பில் இருந்து அதிகாரிகளால் தப்ப இயலாது.

மேலும், இந்த வழக்கில் மணல் குவாரி ஒப்பந்ததாரரான புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணனையும் எதிர் மனுதாரராக இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது. எனவே, இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து, இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்ச்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை.. அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.