ETV Bharat / state

சென்னை ஐஐடி வரலாறு காணாத சாதனை.. 2023-ல் 300 காப்புரிமைகளைப் பெற்றது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 1:06 PM IST

IIT Madras
சென்னை ஐஐடி

IIT Madras: சென்னை ஐஐடி 2023ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி, சுமார் 300 காப்புரிமைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை: சென்னை ஐஐடி (IIT Madras) 2023ஆம் ஆண்டில் பெறப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கையை இருமடங்காக்கி சாதனை படைத்துள்ளது. அதாவது 2022ல் 156 காப்புரிமைகள் மட்டுமே பெறப்பட்ட நிலையில், 2023ல் அந்த எண்ணிக்கை 300 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

அத்துடன், முந்தைய ஆண்டில் 58 சர்வதேச காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (PCT) கீழ் அனுமதிக்கப்பட்டவை உள்பட 2023ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து 105ஐ எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் (டிசம்பர் 2023 நிலவரப்படி) 163 இந்தியக் காப்புரிமை, 63 சர்வதேசக் காப்புரிமை விண்ணப்பங்கள் (PCT சேர்த்து) உள்பட 221 காப்புரிமைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை, இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) என மொத்தம் 2 ஆயிரத்து 550 அறிவுசார் சொத்து (ஐபி), விண்ணப்பங்கள் (காப்புரிமை உள்பட) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் சுமார் 1,100 விண்ணப்பங்கள் ஐபி-க்கள், அனுமதிக்கப்பட்ட காப்புரிமைகள் எனப் பதிவு செய்யப்பட்டவையாகும் (சுமார் 900 இந்தியாவையும், 200 சர்வதேச நாடுகளையும் சேர்ந்தவை). ஐஐடி மெட்ராஸ் 1975ஆம் ஆண்டு ஜனவரியில் (மே 1977-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது) காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். மொத்த ஐபி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் ஆயிரத்தையும், 2022-ல் 2 ஆயிரத்தையும், 2023-ல் 2 ஆயிரத்து 500யையும் கடந்துள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, "நாம் சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது, பாரதம் வல்லரசு நாடாக உருவெடுக்க நமது கருத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைத் தாக்கல் செய்து, சாதனை படைக்கும் வகையில் விரிவான திட்டத்தைத் தொகுத்தளித்த தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுகள்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகள், நவீனப் பொருட்கள், ரோபாட்டிக்ஸ், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திர முன்னேற்றங்கள், உதவி சாதனங்கள், மேம்பட்ட சென்சார் பயன்பாடுகள், தூய்மையான எரிசக்தி, விண்வெளிப் பயன்பாடுகள், பாலிமர் பொருட்கள் மற்றும் மென்படலம், வினையூக்கிகள், உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள் போன்ற களங்களிலும், வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்கியுள்ளனர்.

அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பணியை ஐஐடி மெட்ராஸில் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி (Industrial Consutancy and Sponsored Research- ICSR) அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பிரத்யேக சட்டப்பிரிவு ஒன்றும் இயங்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி டீன் (ஐசி&எஸ்ஆர்) மனு சந்தானம் கூறும்போது, "ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காப்புரிமைத் தேடல் கருவிகள் மூலம் தற்போதுள்ள காப்புரிமைத் தகவல்களை அணுகுவதை இக்கல்வி நிறுவனம் எளிதாக்கியுள்ளது. கண்டுபிடிப்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை விரைவாக மதிப்பீடு செய்து கொள்வது மட்டுமின்றி, தங்களது யோசனைகள் மற்றும் கருத்துகளை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவிகரமாக இருந்துள்ளது.

ஐபியாக உருவாக்கப்படும் படைப்பின் தரத்திற்கும், சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எங்களது கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஐபி குழுவின் கூட்டு முயற்சியால்தான் இதனை செயல்படுத்த முடிந்தது" என பெருமையுடன் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடிப்பாளர்கள் கூறுவது என்ன?: சென்னை ஐஐடி வேதியியல் துறையின் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டி.பிரதீப், 100க்கும் மேற்பட்ட இந்தியக் காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2004 முதல்) மற்றும் சுமார் 50 சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2005 முதல்) தாக்கல் செய்திருக்கும் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர். ஒட்டுமொத்தமாக சுமார் 100 மானியங்களைப் பெற்றுள்ளார்.

பின்னர் காப்புரிமை தாக்கல் செய்வதில் கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் டி.பிரதீப் கூறும்போது, "20 ஆண்டுகளுக்கு முன் எனது முதல் காப்புரிமையைத் தாக்கல் செய்தபோது, அதற்குரிய வழிமுறைகள் ஏதும் இல்லை. காப்புரிமை வரைவு தாக்கல் செய்தல், தேர்வு அறிக்கைகளுக்கு பதிலளித்தல், வணிகப்படுத்துதல் போன்ற அனைத்தையும் நானே செய்து முடித்தேன்.

காப்புரிமை தாக்கல் மற்றும் வணிகப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வலுவான அமைப்பு முறையை பல ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கியிருக்கிறோம். இந்த அமைப்புமுறையைப் பயன்படுத்தி மூன்றே நாட்களுக்குள் காப்புரிமைக்கு தாக்கல் செய்திருக்கிறேன். வணிகப்படுத்துதலுக்காக சாத்தியமான கூட்டாளர்களை அணுகியுள்ளேன். எனது 25 ஐபிக்கள் ஏதோ ஒரு வகையில் வணிகப்படுத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.

ஐஐடி மெட்ராஸ் இயற்பியல் துறையின் பேராசிரியர் எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் கூறும்போது, "நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு காப்புரிமையும், சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமல்ல. தொலைநோக்குக் கருத்துகளை உறுதியான தீர்வுகளாக மாற்றும் நமது முயற்சிகளுக்கு சான்றாகும். புதுமை என்பது வெறும் சுருக்கமான கருத்து அல்ல. உண்மையில் முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாகும்.

அத்துடன் காப்புரிமைக்கும் வணிகப்படுத்தலுக்கும் இடையேயான தொடர்பு முக்கியமான ஒன்றாகும். காப்புரிமைகள் நமது அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, வணிக வெற்றிக்கான நெம்புப்பலகை போன்று செயல்படுகின்றன. மொத்தத்தில், காப்புரிமைகளை செயல்படுத்துவதன் மூலம் தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு உதவுதல் என்ற பொறுப்புணர்வும் இணைந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ்-ன் மின் பொறியியல் துறையின் பேராசிரியர் மோகன்சங்கர் சிவப்பிரகாசம் கூறுகையில், "மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவே என்னையும் எனது குழுவையும் ஐபி-யை உருவாக்கவும் வணிகப்படுத்தவும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

எங்களின் சர்வதேச ப்ராஜெக்ட்கள், சர்வதேசக் காப்புரிமைகள், ஐஐடிஎம்யின் ஐசிஎஸ்ஆர் வழங்கும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை இந்தியாவைத் தாண்டி உலக அளவில் சென்றடையக் கூடியவையாகும். வரும் ஆண்டுகளில் சர்வதேச வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதே எங்களது நோக்கம்" எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியம் கூறும்போது, "எங்களது ஆய்வக ஆராய்ச்சியின் வெளிப்பாடுகளால் பிறருக்கு தீர்வு கிடைக்கும்போது, அதுவே முதன்மையான உந்துதலாகிறது. ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்பம் உலகளவில் சென்றடைவதைக் கண்டு ஆச்சரியமடைகிறோம். இதனைக் கண்கூடாக எங்களால் பார்க்க முடிகிறது.

இந்தியாவிலோ வேறு எங்கோ தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், எங்களது சொந்த ஸ்டார்ட்அப்களுக்கு மென்மையான விதிமுறைகளுடன் ஐபி உரிமத்தை வழங்குவதன் மூலம் எங்களின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறோம்.

விண்ணப்பங்கள் தாக்கல், புதுப்பித்தல் போன்ற பணிகள் அனைத்தையும் ஐபி பிரிவு பொறுப்புடனும் விரைவாகவும் மேற்கொள்வதால் வணிகப்படுத்துவது எளிமையாகிறது. ஐபியின் பணமாக்குதலும் ஒழுங்கமைக்கப்பட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. சிறப்பானதொரு எதிர்காலம் இருப்பது எங்களுக்குப் புலப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் ஐபி/காப்புரிமை விண்ணப்பம் தாக்கல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றை அதிகரிக்க இக்கல்வி நிறுவனம் பின்வரும் முன்முயற்சிகளை எடுத்துள்ளது:-

எளிய ஐபி மேலாண்மைக் கருவி: இக்கல்வி நிறுவனம் திறமையாக உள்ள ஐபி மேலாண்மைக் கருவியை உருவாக்கியுள்ளது. ஆவணப்படுத்தல், ஆவணச் சேமிப்பு, தரவை மீட்டெடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இது உதவுவதுடன், தகவல்களை எளிதாகவும், விரைவாகவும் அணுக வழிவகுக்கிறது.

கட்டணக் குறைப்பு: 21 செப்டம்பர் 2021 முதல், கல்வி நிறுவனங்களுக்கான காப்புரிமைத் தாக்கல் கட்டணத்தை இந்திய அரசு குறைத்துள்ளது. உதாரணமாக இந்தியக் காப்புரிமைக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான அதிகாரப்பூர்வ கட்டணம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.1,600 ஆகக் குறைத்திருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய இந்த ஏற்பாட்டை, இக்கல்வி நிறுவனம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது.

விரைவான கண்காணிப்புப் பயன்பாடுகள்: காப்புரிமை வழக்கு என்பது நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும் செயல்முறையாகும். காப்புரிமை விண்ணப்பம் வழங்கப்படுவதற்கு முன் வெளியீடு மற்றும் பரிசோதனையைத் தொடர்ந்து வெளியிடுவதற்கான சாதாரண கால அவகாசம் 18 மாதங்கள் மற்றும் தேர்வுக்கு 48 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடரும் செயல்முறையை விரைவுபடுத்த அனைத்துத் தகுதியான காப்புரிமை விண்ணப்பங்களும் முன்கூட்டியே வெளியிடுவதற்கும், விரைவான பரிசோதனைக்கும் பரிசீலிக்கப்படுகின்றன. காப்புரிமையை ஒரே மாதத்தில் வெளியிடவும், 3 மாதங்களுக்குள் ஆய்வு செய்யவும் இது அனுமதிக்கிறது.

ஐபிஆர் விழிப்புணர்வு பயிலரங்கம்: ஐபி செயலாக்கம், விண்ணப்பம் தாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு அறிவுசார் சொத்து திட்டங்களை ஐபிஎம் செல் அவ்வப்போது நடத்துகிறது. மேலும் கண்டுபிடிப்பாளர்களின் ஐபி பயன்பாடுகள், உரிமைக் கோரல்களை நன்கு சரிசெய்வதற்கான யோசனையைச் சமர்ப்பிக்கும் நேரத்தில், அவர்களுடன் வழக்கமான சந்திப்புகளை இந்த செல் ஏற்பாடு செய்து தருகிறது.

ஊக்கமளிக்கும் ஆராய்ச்சியாளர்கள்: சிறப்பாக செயல்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு இக்கல்வி நிறுவனம் வெகுமதி அல்லது ஊக்குவிப்புகளை வழங்கி ஐபி உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை ஊக்குவித்தும், ஆதரவளித்தும் வருகிறது.

  • உரிமம் பெற்ற தொகையில் 72% கண்டுபிடிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்
  • சர் ஜே.சி.போஸ் காப்புரிமை விருதுகள்; புதிய கண்டுபிடிப்பு விருது மற்றும் காலப்பரிசோதனை விருது போன்றவற்றை வழங்குவதன் மூலம் சிறந்த செயல்திறன் கொண்ட கண்டுபிடிப்பாளர்களை ஆண்டுதோறும் அங்கீகரித்தல்
  • ஐபி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றப் பணிகளுக்காக சமீபகாலத்தில் கிடைத்த அங்கீகாரங்கள்
  • க்வெஸ்டல் ஐபி எக்சலென்ஸ் விருது 2023
  • சிஐஐ - தொழிலக அறிவுசார் சொத்துரிமை விருதுகள் 2023, கல்வி நிறுவனப்பிரிவில் இந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) வழங்கப்பட்டது. இது 2018 - 2023ம் ஆண்டுகளில் சிறந்த காப்புரிமைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • சிஐஐ - தொழிலக அறிவுசார் சொத்துரிமை விருதுகள் 2022, கல்வி நிறுவனப்பிரிவில் இந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) வழங்கப்பட்டது. இது 2017 - 2022ல் சிறந்த காப்புரிமைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • சிஐஐ - தொழிலக புத்தாக்க விருது 2020, மிகவும் புதுமையான ஆராய்ச்சி நிறுவனப்பிரிவில் (தடுப்புக் கண்டுபிடிப்புகள்) சிஐஐயால் வழங்கப்பட்டது.
  • தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதுகள் 2021 - 2022: காப்புரிமை தாக்கல், மானியம், வணிகப்படுத்தலுக்கான சிறந்த இந்திய கல்வி நிறுவனம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், இந்திய அரசு கல்வி நிறுவனங்களிடையே புத்தாக்க சாதனைகளுக்கான அடல் தரவரிசை, (ARIIA) – மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் (2019 முதல் 2021 வரை) மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் (2019 முதல் 2021 வரை) தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
  • இந்தியாவின் உயர்தர ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு போன்றவற்றின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை ARIIA தரவரிசைப்படுத்துகிறது.

இதையும் படிங்க: டான்செட், சீட்டா தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.