ETV Bharat / state

கபாலீஸ்வரர் கோயில் கலாச்சார மையம் கட்டுமாப் பணிக்கு தடை - உயர் நீதிமன்றம் அதிரடி! - Kapaleeswarar cultural centre

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 3:03 PM IST

Kapaleeswarar Temple Cultural Center issue: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில், 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

மேலும், இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.88 கோடி மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு ரூ.10 கோடி வாடகை வருவாய் பாதிக்கப்படும் எனவும், கோயில் நிதி ரூ.28 கோடியை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும்.

மேலும், அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோயில் நிலத்தில், நிதியில் அமைக்க முடியாது எனவும், அரசு நிலத்தில், அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது எனவும், திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது. ஆகையால், தற்போது கலாச்சார மையம் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், கோயிலின் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும் எனவும், இந்த கலாச்சார மையம் மூலமாக கோயிலுக்கு வருவாய் கிடைக்கும்" எனவும் அரசுத் தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

இந்த நிலையில், எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 3வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு முடியும் வரை கலாச்சார மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் குண்டாஸ் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை கமிஷனருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.