ETV Bharat / state

மறு பிரேத பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு.. விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் நடந்தது என்ன? - MHC ordered re autopsy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 4:12 PM IST

MHC ordered to make re autopsy: விழுப்புரம் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்ததாக கூறப்படும் நபரின் உடலைத் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் புகைப்படம் (Credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: விழுப்புரத்தில், காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம், பெரிய காலனியில் வசித்து வந்தவர் ராஜா. கார்த்திக் என்பவரின் கேன்டீனில் பணியாற்றி வந்த ராஜா, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு விழுப்புரம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் லத்தியால் அடித்ததிலும், பூட்ஸ் காலல் தாக்கியதிலும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பின், அவரை காவல் நிலைய சொந்த பிணையில் போலீசார் விடுவித்தனர். காயமடைந்திருந்த ராஜா, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மீண்டும் உடல் நலம் மோசமானதால், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து, மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என ராஜாவின் மனைவி, அஞ்சு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அவசர அவசரமாக தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததுடன், அதை தகனம் செய்யும்படி போலீசார் நிர்பந்தித்ததாகவும், தங்கள் குடும்ப வழக்கப்படி உடலை அடக்கம் செய்த நிலையில், உடலை தோண்டி எடுத்து தகனம் செய்யும்படி காவல்துறையினர் மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், தனது கணவருடைய உடலை மீண்டும் தோண்டி எடுத்து, மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனவும், இது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சக்திவேல் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, ராஜாவை துன்புறுத்தவில்லை எனவும், இது சம்பந்தமாக 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, ராஜா மரணம் தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததும், காவலில் இருந்த ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, ராஜாவின் உடலை தோண்டி எடுத்து, விதிகளைப் பின்பற்றி, சென்னை மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

மேலும், காவல் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று பாதுகாக்கும்படி, உள்துறை செயலாளர், டிஜிபி, வடக்கு மண்டல ஐ.ஜி, விழுப்புரம் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “பல குடும்பங்களின் பாவச் செயலில் ஈடுபடாதீர்கள்”.. போதைப்பொருளுக்கு எதிராக தஞ்சை கிராமத்தின் முன்னெடுப்பு! - Drugs Banned Village In Thanjavur

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.