ETV Bharat / state

செம்மண் குவாரி வழக்கு; விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 9:06 PM IST

mhc-order-to-furnish-the-red-soil-scam-documents-to-one-of-the-accused-person
செம்மண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசந்திரன் வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..

Ponmudi Related Case: முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய செம்மண் குவாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசந்திரனுக்கு, வழக்கு ஆவணங்களை வழங்க மறுத்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடந்த 2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில், உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-இல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசந்திரன் கோரிய சில ஆவணங்களை விசாரணைக்கு வழங்க முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஜெயசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் வழக்கு தொடர்பாக 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் விசாரணை அதிகாரி கேட்ட விவரங்களுக்கு பதில் அளித்துள்ளதாகவும், அதனால் அந்த ஆவணங்களை சாட்சி விசாரணைக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி, கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் உரிய பதிலை மனுதாரர் தரப்பிலிருந்து அளித்ததாகவும், அந்த பதிலை முறையாக பரிசீலனை செய்திருந்தால் வழக்குப்பதிவு செய்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும் என்பதாலும், தங்கள் தரப்பு சாட்சி விசாரணையின்போது, அது குறித்து குறுக்கு விசாரணை தேவை என்பதாலும், ஆவணங்களை தர மறுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே இரண்டு முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 18ஆம் தேதி சாட்சிகள் விசாரணை உள்ளதால், அதனை மேற்கொள்ளும் வகையில் மனுதாரர் கோரிய ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் வழங்க வேண்டும், ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன? - முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.