ETV Bharat / state

“பாலிசி நிபந்தனைகளை தெளிவற்ற முறையில் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிடுகிறது”.. உயர் நீதிமன்றம் கருத்து! - insurance Policy norms

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 3:23 PM IST

Madras High Court : பாலிசிதாரர்களுக்கு பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், வங்கிகளின் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: டி.சி.பி வங்கியின் சென்னை நுங்கம்பாக்கம் கிளையில், ரூ.71 லட்சம் கடன் பெற்ற லட்சுமி என்பவரின் கணவர், அந்த தொகைக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் காப்பீடு செய்து முறையாக பிரீமியமும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்ததை அடுத்து, காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி லட்சுமி வங்கிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், மரணத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை, உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை, காப்பீட்டில் மாரடைப்பு வராது என்ற காரணங்களைக் கூறி லட்சுமியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, கரோனா காலத்தில் மரணமடைந்ததால் பிரேதப் பரிசோதனை செய்யவில்லை எனவும், திருவேற்காடு நகராட்சி அளித்த சான்றிதழில் மாரடைப்பால் மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என வாதிட்டார்.

பின்னர், வங்கி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், காப்பீட்டு முறையீட்டு வாரியத்தை அணுகாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

வங்கி தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, காப்பீட்டில் மாரடைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், பாலிசி எடுத்த பின் முறையாக பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு வந்த நிலையில், காப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது என வங்கி கூற முடியாது எனத் தெரிவித்து, காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்த வங்கியின் உத்தரவை ரத்து செய்து, நான்கு வாரங்களில் அந்த தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், அந்த உத்தரவில் பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளைக் குறிப்பிடுவதாகவும், இந்த நிபந்தனைகள் பற்றி தனி நபர்களுக்குச் சட்ட அறிவு இருக்காது. இதைப் பயன்படுத்தி, காப்பீட்டுத் தொகையை வழங்குவதை வேண்டுமென்றே புறக்கணித்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தீபக் ராஜா கொலை எதிரொலி.. பழைய ரவுடிகளுக்கு பாதுகாப்பு.. பதற்றத்தில் தென் மாவட்டங்கள்! - Nellai Murder Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.