ETV Bharat / state

பாஜகவை வீழ்த்த நினைக்க இதெல்லாம் தான் காரணம்.. பட்டியலிட்ட சிபிஎம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:55 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Election 2024: ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்டவைகளை பாதுகாக்க வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் தேர்நிலை திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இந்தியா கூட்டணி சார்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், 'பாஜக ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவின் அரசியல் சாசனம் என்பது சாதி மதம் மற்றும் இனங்களுக்கு அப்பாற்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஜக அதை மாற்றுவதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது.

மின்சார உற்பத்தி, மின்விநியோகம், வங்கிகள், ரயில்வே, விமான சேவை என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் போக்குவரத்து என எல்லா செலவுகளும், லாபம் மட்டுமே இலக்காக கொண்டிருக்கும் தனியாருக்கு கொடுப்பதன் மூலம் பன்மடங்கு அதிகரிக்கும். அதனால்தான், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியளித்தனர்.

இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல. கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் தான். எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசின் உரிமைகளில் செயல்பாடுகளில் தினமும் தலையிடுகிறார்கள். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்கள் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த வைசிராய் போல செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம் கல்வியில் தலையிடுகிறார்கள்.

நீங்கள் என்ன மொழி படிக்க வேண்டும், என்ன தேர்வு எழுத வேண்டும்; இப்படியான கட்டாயங்களுடன் இந்தியை திணிப்பதற்கான முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளாவுக்கு ஆதரவு கொடுத்தார். அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பாஜகவை இன்று நாம் தோற்கடிக்க வில்லை என்றால், மாநிலங்களின் உரிமைகளும், அதிகாரங்களும் தொடர்ச்சியாக பறிக்கப்படும். கூட்டாட்சி தத்துவம் என்பதற்கு ஒரு முடிவு கட்டப்படும். மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்காக, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்காக, பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன்.

கடந்த முறையைப் போல, இம்முறையும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவர் கோவையில் போட்டியிடுவதால் அக்கட்சி இங்கு வெற்றி பெற்று விடலாம் என பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்குகள் அவர்களது கனவுகளை பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்தியா கூட்டணி சார்பில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வள்ளலார் பன்னாட்டு மைய விவகாரம்; அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - ANBUMANI RAMADOSS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.