மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து நான்கு நாட்களாக செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ரயிலடி என நகரைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதியில் முகாமிட்டும், கூண்டுகளை வைத்தும், 16 தானியங்கி கேமராவை பொருத்தியும் சிறுத்தையைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள காஞ்சி வாய் என்ற கிராமத்தில் அக்ரஹார தெருவில் நேற்றிரவு 12 மணிக்குச் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த கால் தடத்தைக் கூடையைக் கொண்டு மூடி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் இன்று காலை பாலையூர் போலீசார் ஆய்வு செய்து அந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடத்தை ஒத்திருப்பதை அறிந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வன ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் பொம்மன் தலைமையிலான மூன்று வனக் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
இதில், அங்குப் பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்த போது அதில் சிறுத்தையின் உருவம் தெளிவாகப் புலப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காஞ்சி வாய் பகுதி என்பது மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை தென்பட்ட இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்துச் சென்றிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் வனத்துறையினர் காஞ்சி வாய் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தபால் வாக்கு பெட்டிக்கு பதில் இபி பெட்டியா? ஆம்பூரில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம்! - Lok Sabha Election 2024