ETV Bharat / state

நில உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:50 PM IST

Updated : Feb 3, 2024, 2:21 PM IST

dmk councillor of 19th ward in salem
சேலம் 19வது வார்டு திமுக கவுன்சிலருக்கு எதிராக நில அபகரிப்பு மனு.

Salem 19th ward DMK Councilor: சேலம் மாவட்டத்தில், நில அபகரிப்பில் ஈடுபட்ட 19வது வார்டு திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சேலம்: சேலம் மாவட்டம், சின்னம் பாளையம் சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர், ரங்கநாதன். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த சிப்ஹதுல்லா என்பவரிடமிருந்து 900 சதுர அடி காலி வீட்டு மனையை விலைக்கு வாங்கி, அதில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி உள்ளார்.

அப்போது உள்ளாட்சித் தேர்தல் என்பதால், தேர்தல் பணிக்காக அந்த இடத்தை சேலம் மாநகராட்சி 19வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள தேன்மொழி (தற்போதைய) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். வாடகைக்கு எடுத்து தற்போது 18 மாதங்கள் ஆகியும் நிலத்தை ஒப்படைக்காமலிருந்து வருகிறார் எனவும், அந்த இடத்தை கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வருகிறார் எனவும், நிலத்தைக் கேட்டால் குடும்பத்தைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ரங்கநாதன், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், அந்தப் புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (பிப்.2) வந்து நிலத்தை அபகரித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடும் திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என மனு வழங்கினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “தேர்தல் பணி அலுவலகம் அமைப்பதற்காக, இந்த இடம் வேண்டுமென்று எங்களிடம் வாடகைக்கு திமுக கவுன்சிலர் தேன்மொழி மற்றும் அவரின் கணவர் செட்டி என்கிற சுப்பிரமணியன் ஒப்பந்தம் போட்டு எடுத்துக் கொண்டனர். தேர்தல் முடிந்து, தேன்மொழி கவுன்சிலர் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகும், அந்த இடத்தை எங்களுக்குத் தராமல் வேண்டுமென்றே அபகரித்துக் கொண்டனர்.

காவல் நிலையம் மட்டுமல்ல, முதலமைச்சர் அலுவலகம் வரை சென்றாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள், இந்த 900 சதுர அடி எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுகின்றனர். நிலத்தைக் கேட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம் என்று தொடர்ந்து கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இது தொடர்பாக சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்தனர். ஆளும் கட்சியின் கவுன்சிலர் நில அபகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "ராஜராஜ சோழனுக்குப் பிறகு திமுக ஆட்சியில்தான் கோயில் திருப்பணிகள் அதிகம் நடைபெறுகிறது" - அமைச்சர் சேகர்பாபு

Last Updated :Feb 3, 2024, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.