ETV Bharat / state

பள்ளத்தில் சரிந்த கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்! - Kumbakonam Sarangapani Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 3:24 PM IST

Updated : Apr 23, 2024, 4:12 PM IST

பள்ளத்தில் சரிந்த சாரங்கபாணி கோயில் தேர்
பள்ளத்தில் சரிந்த சாரங்கபாணி கோயில் தேர்

Kumbakonam Sarangapani Temple: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைத் தேரோட்டத்தின் போது 500 டன் எடை கொண்ட தேர், 5 அடி பள்ளத்தில் சரிந்ததை அடுத்து தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பள்ளத்தில் சரிந்த கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் 3வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரைத் தேரோட்டம் உற்சவம், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆர்வமாக தேரினை வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

இந்நிலையில், தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் சாரங்கபாணி கீழ வீதியைக் கடந்து, தெற்கு வீதியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலைக் கடந்து வரும் போது, தேரின் முன்பகுதியில் உள்ள இடதுபுற சக்கரம், சாலையில் சுமார் 5 அடி பள்ளத்தில் திடீரென சிக்கியது. இதனால் தேரோட்டம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து, தேரோட்டப் பணியாளர்கள், பெரிய ஜாக்கிகளைக் கொண்டு தேரின் சக்கரம் மேலும் பள்ளத்தில் இறங்காமல் இருக்க, தேரை தரை மட்டத்திற்கு உயர்த்தினர். சுமார் 110 அடி உயரமும், 500 டன் எடை கொண்ட இந்த தேரை, பல்லத்தில் இருந்து மீட்க சம்பவயிடத்திற்கு உடனடியாக கிரேன் கொண்டு வரப்பட்டது.

பின்னர், முன்சக்கரத்தை கிரேன் உதவியோடு தூக்கி நிறுத்திவிட்டு, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பெரிய கருங்கல், ஜல்லி கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கொண்டு நிரம்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர், தேரின் சக்கரங்கள் ஓட ஏதுவாக, பள்ளத்தின் மீது பெரிய தடிமனான ஒரு இரும்பு பிளேட்டை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் தேரோட்டம் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா 10 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா கொண்டு செல்லப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை), சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் 3வது பெரிய தேரின் தேரோட்டம் நடைபெற்றது.

அலங்கார மேற்பரப்பு மட்டும் 47 அடிக்கு செய்யப்பட்ட இந்த தேர் 500 டன் எடையும், 110 அடி உயரமும் கொண்டது. மேலும், இந்த பெரியத்தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 10 அடி உயரம் கொண்டது. குறிப்பாக, இத்தேரின் வடம் ஒவ்வொன்றும் 5 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் ஒரே சமயத்தில் எதிர்சேவை அளித்த இரு கள்ளழகர்.. விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்!

Last Updated :Apr 23, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.