ETV Bharat / state

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி பரபரப்பு புகார்! - KOLATHUR MANI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 6:30 PM IST

Kolathur Mani complaint: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி புகார் அளித்துள்ளார்.

கொளத்தூர் மணி புகைப்படம்
கொளத்தூர் மணி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி உள்ளது. அவரது ஜீவ சமாதி நாளையொட்டி நடைபெறும் அன்னதானத்தில், சாப்பிட்ட பின்னர் அந்த இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு வழிபாடு செய்கின்றனர்.

இந்த நிகழ்வுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், இது போன்று நடந்த நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தார்.

மேலும், சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவர்களுக்கு ஆன்மீக பலனைத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அது தனிப்பட்ட நபரின் ஆன்மீகத் தேர்வு என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த இந்த தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “கடந்த ஏப்.28ஆம் தேதியிட்ட W.P (MD) 7068/2015-இல் தலித் பாண்டியன் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் பக்தர்களை உருட்டுவதை தடை செய்தது.

பிறர் உணவு உண்ட பின் மீதியுள்ள வாழை இலையில் உருளுவது என்பது மனித மாண்புக்கும், நாகரீக சமுதாயத்திற்கும் எதிரானது. இத்தருணத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவத்திற்கு தீர்ப்பு அளித்தது.

நீதித்துறை ஆணையின் படி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்ட தீர்ப்புகளை ரத்து செய்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக பிறர் உணவு உண்ட பின் மீதியுள்ள வாழை இலையில் உருளும் நாகரீகமற்ற வழக்கை மீட்டெடுத்து உள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனி நீதிபதியாக இருப்பதால், சமூக ஒழுங்கை பராமரிக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே விஷயத்தில் டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தீர்ப்பளித்துள்ளார். இவ்வாறு ஜி.ஆர் சுவாமிநாதன் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நீதித்துறை ஒழுக்கத்தை மீறி உள்ளார்.

மதப் பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் உணவு சாப்பிட்டு விட்டு இலைகளில் மனிதர்களை உருட்டுவது அடிப்படை உரிமை என்று உயர்நீதிமன்றம் போன்ற அரசியல் சாசன நீதிமன்றங்கள் கருதக்கூடாது. ஜி.ஆர்.சுவாமிநாதன் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக, குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, எதிர்த் தரப்பினை எதிர் அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் பொதுவாக வழங்கப்படும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளின் கவனமான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த கருத்துகளை கூற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்! - DRUG AWARENESS FOR SCHOOL STUDENTS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.