ETV Bharat / state

"வேப்பங்குளம் விவசாய மாடலை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்" - ஐடி வல்லுநர் திருச்செல்வம் கோரிக்கை! - Veppankulam farming model

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 2:08 PM IST

Veppankulam Farming Model
Veppankulam Farming Model

Veppankulam Farming Model: சிவகங்கை வேப்பங்குளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாய மாடலை நாடு முழுவதும் செயல்படுத்தினால் விவசாயிகளின் பிரச்னைகள் தீரும் எனவும், இதனை அனைத்து வேட்பாளர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என ஐடி வல்லுநர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

Veppankulam Farming Model

மதுரை: சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத்தில் விவசாயம், நீர்மேலாண்மை, தகவல் தொழில் நுட்பம் என அனைத்தும் ஒருங்கிணைத்து வேளாண்மையை வெற்றிகரமாக்கியுள்ள நிலையில், இதனை இந்தியா முழுவதும் அனைத்துக் கிராமங்களுக்கும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் கொண்டு செல்ல வேண்டும் என தகவல் தொழில்நுட்ப வல்லுநர் திருச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்செல்வம் கூறுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த ஐடி வல்லுநர்கள் குழு கடந்த 23 ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை கிராம அளவில் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக, விவசாயத்தை திட்டமிடுவதிலிருந்து விற்பனை செய்வது வரை உள்ள தேவைகளை விவசாயிகள் அவரவர் கிராமத்திலேயே பூர்த்தி செய்து கொள்வதற்கு முழு தீர்வொன்றை நாங்கள் உருவாக்கினோம்.

அதுமட்டுமன்றி, விலை ஏற்ற இறக்கங்கள், உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் குறித்த முழுமையான தரவுகள் விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. அந்த அடிப்படையை நிறைவேற்றும் விதமாக ஒரு கிராமத்தில் எந்த பயிர், எந்த காலகட்டத்தில், எத்தனை ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது என்பதை தொடர்ந்து பதிவு செய்வதால் இந்தியா முழுவதும் பயன்படும். இதனால் அரசோ அல்லது விவசாயத்துறையோ தேவைக்கேற்ற வகையில் விவசாயிகள் பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.

இந்தத் திட்டம் ஆந்திர மாநிலம் புலிவேந்துலா எனும் ஒன்றியம், கடப்பா மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செய்யும் வாய்ப்பு கடந்த 2004-ஆம் ஆண்டு கிடைத்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு வரை அந்தத் திட்டத்தை அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதனை விரிவாக்கம் செய்தபோது, மத்திய-மாநில உயர்மட்டக்குழு, இத்திட்டம் இந்திய வேளாண்மையில் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என ஒப்புதல் அளித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக 2010-ஆம் ஆண்டு இத்திட்டம் ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்காக நாங்கள் மனம் தளராமல், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டோம். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திலுள்ள வேப்பங்குளம் கிராமத்தின் வருவாயை இரட்டிப்பாக்க முயன்றோம். கடந்த 2018-ஆம் ஆண்டு அந்தக் கிராம மக்களின் நிதி பங்களிப்புடனே அங்குள்ள நீர்நிலைகளை சரி செய்தோம். இதன் விளைவு இன்று விவசாயத்தில் அந்தக் கிராமம் தன்னை முழுவதுமாக மீட்டெடுத்துள்ளது. இதில் நீர் மேலாண்மை மட்டுமன்றி, விவசாய மேலாண்மை, பயிர் மேலாண்மை ஆகியவற்றோடு சந்தைப்படுத்துதலிலும் சிறந்து விளங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2021-23-ஆம் ஆண்டு உழவர் உதவி மையத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் அந்த மண்ணில் விளையக்கூடிய மாம்பழம், நார்த்தம்பழம், எலுமிச்சம்பழம் போன்ற விளைபொருட்களை 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கூரியர் மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அந்தக் கிராமம் பெற்றுள்ளது.

அத்துடன், நீர், சந்தைப்படுத்துதல், அதிகம் பயன்தரக்கூடிய பயிர், அந்தக் கிராம மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்தல் இவை அனைத்தும் சேர்ந்து கிராம மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. 27 ஹெக்டேராக சுருங்கியிருந்த அந்தக் கிராமத்தில் விவசாயம், தற்போது 60 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. விவசாயம் என்பது நம் கையை மீறிச் சென்றுவிட்டது. இனி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என பெரும்பாலான கிராமங்கள் விவசாயத்தைக் கைவிட்டு வெளியேறும் நிலையில், இன்றைக்கு வேப்பங்குளம் கிராமம் செய்துள்ள இந்த சாதனை பிற அனைத்துக் கிராமங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும்.

இந்த மாடலை மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி விரிவாக்கம் செய்து, ஒவ்வொரு கிராமமும் உழவர் உதவி மையம் உருவாக்கி, தகவல் தொடர்புத் துறையால் ஒருங்கிணைக்கப்படும் போது, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயத்திலுள்ள பல பிரச்சனைகள் தீர்ந்து போகக்கூடிய வாய்ப்பும் ஏற்படுகிறது. இதுகுறித்த அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுபோன்ற உழவர் உதவி மையங்கள் இந்திய முழுவதும் ஏற்படுத்தப்பட்டால், தற்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்களையும் நேரில் சந்தித்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும்போது, இந்தத் திட்டம் குறித்த கருத்துக்களை முன் வைக்க முடியும். இதன் மூலம் இந்திய விவசாயிகளும் சரி, கிராமங்களும் சரி முழுமையாகப் பயன்பெறும் வாய்ப்பு உருவாகும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து! - RAMZAN CELEBRATION In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.