ETV Bharat / state

"ஷூ இல்ல.. வெறும் காலில் தான் 3 வருடம் பயிற்சி" - வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை விளக்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 12:30 PM IST

International Cricketer Natarajan
சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன்

International Cricketer Natarajan: வாழ்வில் கஷ்டங்கள் இருந்தாலும், லட்சியத்தை நோக்கிய பயணம் நிச்சயம் வெற்றி தரும் என மயிலாடுதுறையில் சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விமேக்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட 1 அஸ்ட்ரோ டர்ப் விக்கெட் மற்றும் 2 கிரிக்கெட் பிராக்டிஸ் நெட் ஆகியவற்றை, தமிழகத்தை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜனும், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, நடராஜன் (பவுலீங்) பந்து வீச, காவல் கண்காணிப்பாளர் மீனா பிராக்டிஸ் நெட்டில் பேட்டிங் ஆடினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சர்வதேச கிரிக்கெட் வீரர் நடராஜன், "பள்ளியில் படிக்கும் போது வறுமையின் காரணமாக ஷூ வாங்கக் கூட முடியாத நிலையில், வெறும் கால்களுடனேயே மூன்று வருடங்கள் பயிற்சி செய்தேன். வீட்டில் நல்ல உணவு கூட இருக்காது. பெற்றோர் கூலி வேலை செய்து தான் என்னை வளர்த்தனர்.

நாம் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் கடுமையாக பயிற்சி பெற்றால், அதை எவரும் ஊக்குவிக்க மாட்டார்கள். எதிர்மறையான எண்ணத்தை மட்டுமே விதைப்பார்கள். அதேதான் எனக்கும் நடந்தது. ஆனால், அன்று அவ்வாறு பேசியவர்கள்கூட, இன்று நான் வெற்றியடைந்த உடன், நான் நிச்சயமாக வளருவேன் என அப்போதே தெரியும் என இப்போது கூறுகின்றனர்.

நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அதில் கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றி கிட்டும். எனவே, நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்காக அல்ல, உங்களுக்காக வாழ வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயத்தை நோக்கி பயணப்படுங்கள். இன்றைய தலைமுறையினர், விளையாட்டில் ஆர்வம் செலுத்தாமல் செல்போன் மோகத்தில் தான் உள்ளனர்.

மாணவர்கள் விளையாட்டு, படிப்பு என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் தர வேண்டும். போதிய படிப்பின்மை காரணமாக நான், மொழி பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். பள்ளியில் படிக்கும்போது செங்கல் சூளை, கட்டட வேலை, ரோடு போடும் வேலை என பல வேலைகளைச் செய்துள்ளேன். இவற்றை எல்லாம் தடையாக எண்ணக்கூடாது. விளையாட்டுக்கு தடை, நம் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் தான்.

பெற்றோர் உங்களுக்கு அளிக்கும் சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தாமல், இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள். கிரிக்கெட்டில் நான் வாங்கிய கோப்பைகளை வைக்க, எனது சிறிய வாடகை வீட்டில் இடம் இல்லாமல், 400-க்கும் மேற்பட்ட கோப்பைகளை எனது நண்பர்கள் வீட்டில் வைத்திருந்தேன். வாழ்வில் கஷ்டங்கள் இருந்தாலும், லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும்போது, அது நிச்சயம் வெற்றியைத் தரும்.

அந்த வெற்றி தரும் மகிழ்ச்சி அளப்பரியது. எல்லாத் துறைகளிலும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் அதை பெறுவதற்கான திறமைகளை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் எனது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கியதற்கு காரணம், சுற்றுவட்டார கிராம மக்கள் அதனால் பயனடைய வேண்டும் என்பதே.

விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அனைவருமே உடலை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க வேண்டும். கடினமாக உழைப்பு அவசியம், தன்னம்பிக்கையை விடக்கூடாது. தோல்விகளை சந்திக்கும் போது தான் வாழ்வில் அடுத்த நிலையை எட்ட முடியும். எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும், தன்னடக்கம் வேண்டும்" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இரண்டரை வயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட 5 வயது இரட்டை சகோதரிகளான சிவன்யா, சிவானி ஆகியோர் கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் பரிசு கொடுத்து, அவரின் மகளுக்கு வழங்கக் கோரி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் மாணவர்கள், அவரிடம் ஆட்டோகிராப் பெற்றனர். சில மாணவர்கள் கிரிக்கெட் பேட்டில் ஆட்டோகிராப் பெற்ற நிலையில், சிறுமி ஒருவர் தான் அணிந்திருந்த டீசர்ட்டில், முதுகில் கையெழுத்தைப் பெற்றார்.

இதையும் படிங்க: நாளை முதல் விலை உயரும் ஆவின் ஐஸ்கிரீம்.. புதிய விலை பட்டியல் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.