ETV Bharat / state

தென்காசியில் இரு வேறு வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு.. 60 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 10:31 PM IST

தென்காசி
தென்காசி

ELECTION BOYCOTT: தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இருமன்குளம் பகுதியில் 1231 வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 60 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தென்காசியில் தேர்தல் புறக்கணிப்பு.. 60 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு!

தென்காசி: தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 72.09 சதவீதம் வாக்குப் பதிவாகி உள்ளது. அந்த வகையில் இன்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் அருகே இருமன்குளம் பகுதியில் உள்ள மக்கள் தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். இருமன்குளம் பகுதியில் சுமார் 1231 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இன்று வெறும் 60 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு காரணமாக, அந்த பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக் கோரியும், இது குறித்து பல முறை போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டிக்கவில்லை எனவும், உடனடியாகக் கல்குவாரியை மூட கோரியும் பொதுமக்கள் வாக்களிக்காமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அதேபோல், கல்குவாரிக்கு அருகே உள்ள ப்ளூ மெட்டல் கிரேசரையும் மாவட்ட நிர்வாகம் செயல்பட அனுமதித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதையும் நிரந்தரமாக மூடக்கோரி வாக்களிக்காமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 1231 வாக்காளர்கள் உள்ள நிலையில், வெறும் 60 பேர் மட்டுமே வாக்களித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கடையநல்லூர்: இதேபோல் கடையநல்லூரில் உள்ள 26, 27 ஆவது வார்டு பகுதியில் 242 வாக்குச்சாவடி மையத்தில் கடந்த முறை வாக்களித்தவர்களில் 272 நபர்களுக்குப் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பலரிடம் வாக்காளர் அட்டை இருந்தும் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, "கிட்டத்தட்ட 272 வாக்காளர்களின் பெயர் வாக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரிடமும் வாக்காளர் அட்டையானது உள்ளது. இருப்பினும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

அதற்கான காரணத்தைக் கேட்டாலும், பதில் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த முறை இவர்கள் அனைவரும் வாக்களித்து உள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பெயர்களை நீக்கியுள்ளனர். தற்போது இந்த பெயர் நீக்கத்தால் ஓட்டுப் போட முடியாமல் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்துத் தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அளிக்க உள்ளோம்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "இறுதி வாக்காளர் வாக்கு அளிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும்" - சத்யபிரதா சாகு - SATYABRATA SAHOO PRESS MEET

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.