ETV Bharat / state

வேலைக்கு சென்ற மனைவி மீது சந்தேகம்; கொலை செய்த கணவன்.. சென்னை கொரட்டூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 11:39 AM IST

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்
கொரட்டூர் கொலை

Korattur murder: சென்னை கொரட்டூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: கொரட்டூரில் மனைவி வேலைக்குச் சென்றதால் அவர் மீது சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கணவரை, கொரட்டூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42). இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், பண பற்றாக்குறை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மளிகை கடையை மூடியுள்ளார். இதனால், குடும்ப செலவுக்காக அவரது மனைவி சியாமளா தேவி, வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சியாமளா தேவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவருடன் சுரேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று (பிப்.8) காலை வழக்கம் போல் கணவன், மனைவி இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், சியாமளா தேவியின் கழுத்தில், காய்கறி வெட்ட பயன்படுத்தக்கூடிய கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், கத்தியை அங்கே வைத்துவிட்டு, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சியாமளாவின் மகன்கள் எழுந்து, படுக்கை அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் இருந்த தாய் சியாமளாவின் உடலைக் கண்டு பதறிப் போன மகன்கள், வீட்டின் கதவை திறக்க முயன்றுள்ளனர். கதவு வெளிப்புறமாக பூட்டிருந்ததால் தட்டி கூச்சலிட்டுள்ளனர். இதனால், அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த நிலையில், சியாமளா இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இதுகுறித்து கொரட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார் சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து சுரேஷை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சியாமளா தேவியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொரட்டூர் கெனால் ரோடு மதுபானக் கூடம் பின்புறத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷை, கொரட்டூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: போலீசாரின் வழக்குப்பதிவில் வெளியான தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.