ETV Bharat / state

ஆளுநர் உள்ளிட்ட தலைவர் பங்கேற்க உள்ள மகா கும்பாபிஷேகம்.. புனித நீர் எடுத்து வரும் நிகழ்வு கோலாகலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 8:03 PM IST

புனித நீர் எடுத்து வரும் நிகழ்வு கோலாகலம்
தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ள மகா கும்பாபிஷேகம்

பிப்ரவரி 2ம் தேதி கும்பகோணம் அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்காக இன்று வீரசோழன் ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்வு மேல தளங்களுடன் விமரிசையாக நடைபெற்றது.

தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ள மகா கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வீரசோழன் ஆற்றில் இருந்து கொண்டு யாகசாலை பூஜைக்காக புனிதநீரை வீரசோழன் ஆற்றில் இருந்து கொண்டு வரும் நிகழ்வானது தருமபுர ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், இன்று (ஜன.30) நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வு ஒட்டங்கள், குதிரைகளின் அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்று.

தமிழகத்திலேயே புகழ்பெற்ற சரபேஸ்வரர் தலமாக போற்றி வணங்கப்பெறுவது கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் கம்பகரேஸ்வர சுவாமி கோயில். தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயில் 3ம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களை கொண்டது.

இந்த கோயிலின் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த கும்பாபிஷேக பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மகா கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் திருபுவனம் வீரசோழன் ஆற்றிலிருந்து இன்று புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இந்த நிகழ்வில் கோயில் காளை, ஒட்டகங்கள், 10 குதிரைகள், ஆகியவை முன்செல்ல அவற்றை தொடர்ந்து தலா 108 தவில், 108 நாதஸ்வரங்கள் மற்றும் நந்தி வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள், பரிவாரங்களுடன் 3 யானைகள் மீது 3 புனித நீர் கடங்களில் வைத்து எடுத்து வரப்பட்டு, கோயிலை சுற்றியுள்ள வடக்கு வீதி, கீழவீதி, சன்னதி தெரு வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயிலை அடைந்தது.

பின்னர் கோயிலில் உள்ள யானைக்கு நறுமண மலர்கள் தூவி, பழங்கள் உணவாக அளித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் பிரகாரங்களை சுற்றிய பின் புனித நீர் யாகசாலையில் கொண்டு சேர்க்கப்பட்டது. இந்நிகழ்வில், கோயில் சிவாச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், கோயில் ஊழியர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பிப்ரவரி 2ம் தேதி நடைபெரும் 8ம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹதி மற்றும் மகா கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி முதல்வர் என்.ரெங்கசாமி, தமிழக அமைச்சர் பெருமக்கள், ஆதீனர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: திருவையாற்றில் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை இசை நிகழ்ச்சி கோலாகலம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.