ETV Bharat / state

எம்.ஜி.எம் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 9:58 PM IST

Madras high court: ஒலி மாசு புகார் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
Madras high court

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி கொண்ட மருத்துவமனையை கட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமான பணியில் ஆழ்குழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்பு இருப்பதால் கட்டுமான பணிகளின் சத்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

நள்ளிரவையும் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு, கட்டுமான சத்தத்தை குறைக்க கூறி கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6மணி முதல் காலை 8 மணி வரை தடை விதிக்க வைக்க வேண்டும், ஒலி மாசுவை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் தரப்படவில்லை, உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிக்கை அளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.