ETV Bharat / state

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 6:44 PM IST

Updated : Feb 8, 2024, 2:08 PM IST

Senthil Balaji case
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

ED Investigation: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, வரும் பிப்.15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இந்த வழக்கில், ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்கக் கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த மனுவுக்கு பதிலளித்து, அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டுப் பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டுப் பதிவை அல்ல என்றும், போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையைத் தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜாராகி, மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில், அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் என கூறினார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை எனவும், மேலும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் பதிலளித்தார். அதாவது, இவ்வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டுப் பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மனு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட 2 தீர்ப்புகளுக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும், விசாரணையை தள்ளி வைக்கக்கோரும் செந்தில் பாலாஜியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்து உத்தவிட்டார்.

இதையும் படிங்க: "டெல்லியில் உட்காந்து கொண்டு எந்த மொழி பேச வேண்டுமென முடிவு செய்ய முடியாது" - எம்பி செந்தில்குமார்

Last Updated :Feb 8, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.