ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவி பழிவாங்கும் நோக்கத்துடன் சட்ட வரம்பு மீறிச் செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 10:40 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி பழிவாங்கும் நோக்கத்துடன் சட்ட வரம்பு மீறிச் செயல்படுகிறார்
ஆளுநர் ஆர்.என்.ரவி பழிவாங்கும் நோக்கத்துடன் சட்ட வரம்பு மீறிச் செயல்படுகிறார்

CPI(M) State Committee Secretary K.Balakrishnan: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் பழிவாங்கும் நோக்கத்துடன் சட்ட வரம்பு மீறிச் செயல்படுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனுக்குப் பரப்புரை மேற்கொள்ளும் விதமாகச் சிறப்புப் பேரவை கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. முதலமைச்சர் முன்மொழியும் நபர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எனப் பார்ப்பது ஆளுநரின் வேலை அல்ல.

ஆளுநர் பழிவாங்கும் நோக்கத்துடன் சட்ட வரம்பு மீறி செயல்படுகிறார். எதிரணியில் இருப்பவர்கள் கூட்டணி குழப்பத்தில் உள்ளனர். இதுவே 40 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது.

என்ன தான் ஆளுநரை, விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தினாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது. ஹரியானா உட்படப் பல மாநிலங்களில் பாஜகவிடமிருந்து கூட்டணிக் கட்சிகள் விலகிக் கொண்டிருக்கின்றன. பிரச்சாரத்திற்குரிய கால அவகாசம் கூட தராமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உண்மையில் மோடியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. மோடி ஏற்கனவே 3 மாதமாகத் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டார். எனவே மோடி தான் தேர்தலை அறிவித்துள்ளது போல தெரிகிறது. பாஜக தோற்றுவிடும் எனத் தெரிந்திருந்தும் தமிழிசை ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

பாவம் அவர்களுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை, தமிழிசைக்கு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். படாத பாடு பட்டு பாமகவைக் கூட்டணியில் சேர்த்துள்ளது பாஜக. பாமகவைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு வாரிசு அரசியல் பற்றி மோடி பேசலாமா, கூட்டணிக்காக உங்களுடைய கொள்கையை நீங்களே மீறி விட்டீர்கள்" என்றார்.

இதையும் படிங்க: மதுரை ரயில் நிலையத்தில் தாய்மை.. பசியால் தவித்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் பயணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.