ETV Bharat / state

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகி வாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 6:34 PM IST

DGP Rajesh Das Case
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு

DGP Rajesh Das Case: பெண் எஸ்பி பாலியல் வழக்கில் இன்று முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகி, அவர் தரப்பு வாதத்தை அவரே முன்வைத்ததைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்து உடுத்தவிட்டுள்ளார்.

விழுப்புரம்: கடந்த 2021ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் எஸ்பிக்கு, அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுமட்டுமல்லாது, டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதனை அடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார், ராஜேஷ் தாஸ். இத்தகைய சூழலில், இந்த வழக்கு கடந்த 24-ஆம் தேதி நீதிபதி பூர்ணிமா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வருகின்ற 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க ராஜேஷ் தாஸ் தரப்பில், மீண்டும் கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் ராஜேஷ் தாஸ் கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜனவரி 31-ஆம் தேதி வாதங்களை முன்வைக்காவிட்டால், பிப்ரவரி 3-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்த நிலையில், இன்று (பிப்.01) வாதாடுவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், ராஜேஷ் தாஸ் வழக்கறிஞர்கள் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கவில்லை.

இதன் காரணமாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் விளக்கங்களை அவரே நீதிமன்றத்தில் முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, வழக்கு விசாரணையை நீதிபதி நாளை (பிப்.02) ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.