ETV Bharat / state

இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டி; ஓபிஎஸ் பேச்சால் சின்னம் முடங்கும் அபாயம்.. அதிமுகவில் நடப்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 11:36 AM IST

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

O.Panneerselvam: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியது, அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

புதுக்கோட்டை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், மாவட்டம் வாரியாக தொண்டர்களைச் சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்.5) நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரத்தினசபாபதி, தெற்கு மாவட்ட செயலாளர் ஞான கலைச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்ன சபாபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

துரோகம் ஆட்சி: அப்போது அவர் பேசுகையில், “அதிமுக தொண்டர்களின் இயக்கம். அதனால் தான் பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதை தொண்டர்களுக்கு தான் தந்தார்‌ எம்ஜிஆர். அதை திருத்தம் செய்யவோ மாறுதல் செய்யவோ கூடாது என்று எம்ஜிஆர் கூறினார். துரோகம் ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகம் செய்து அதை காலில் போட்டு மிதித்து, அதனை ரத்து செய்துள்ளார்.

தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம்: தற்போது கோடிகளை குவித்து வைத்துள்ள மிராசுதாரர்கள் கோடீஸ்வரர்கள் தான் பொதுச்செயலாளர் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையை ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை, பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க விடலாமா?. அதற்காக தான் தற்போது தர்மயுத்தம் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்களின் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி வருகிறோம்.

கட்சி பிளவுபடக்கூடாது: எடப்பாடி பழனிசாமி மறைமுகமான சதி வேலை செய்தார். முதல் தர்மயுத்தம் தொடங்கிய போது தொண்டர்களின் விருப்பப்படி நிபந்தனையின்றி இணைந்தோம். ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும், கட்சியை நானும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்சி விவகாரத்தில் இருவரும் கையொப்பம் போட வேண்டும் என்று குண்டை தூக்கி போட்டார்கள். கட்சி பிளவுபடக்கூடாது என்பதற்காக அதையும் ஏற்றுக்கொண்டேன்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே சமயம் பார்த்த எடப்பாடி பழனிசாமி கூவாத்தூரில், ஒற்றை தலைமை வேண்டும் என்று பேச வைத்தார். பின்னர் பொதுக்குழுவை கூட்டியதாக கூறி ரவுடிகளையும், கேடிகளையும் வைத்து கொண்டு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் பழனிசாமியின் பல தடைகளை தாண்டி நான் கலந்து கொண்டேன்.

8 தேர்தலில் தோல்வி: அதில் இதுவரை எந்த அதிமுக பொதுக்குழுவிலும் நடைபெறாத வகையில் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் வீசி அவமரியாதை செய்யப்பட்டது. பின்னர், இரண்டாவது பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா வகித்த பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அந்த பதவியை ரத்து செய்ய பழனிசாமி யார்?, அவர் பொறுப்பேற்று 8 தேர்தலில் தோல்வியை கண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியே காரணம்: தான் மட்டுமே தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்து தவறான கொள்கை முடிவை எடுத்து தான் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று எண்ணினார். நான் வேண்டாம் வெற்றியடைந்தவுடன் பார்த்து கொள்வோம் என்றேன். கேட்காததால் அவரே முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து, அந்த பாவத்தை நான் தான் செய்தேன். சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, எதிர்கட்சியாக வர ஒரே காரணம் எடப்பாடி பழனிசாமி என்ற தனிமனிதன் தான்.

கூட்டணி சேர்வதற்கு ஆளில்லை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுதோல்வி அடைய காரணம் பழனிசாமி தான் காரணம். தொடர்ந்து 9 தேர்தலில் தோல்வி. அவருக்கு ஒரு சதவீதம் கூட மக்களிடம் ஆதரவு இல்லை. கூட்டணி சேர்வதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. அதிமுகவோடு போட்டி போட்டு கூட்டணி பேசிய காலம் எல்லாம் போய், தற்போது கூட்டணி சேர்வதற்கு ஆளில்லை. காலை முதல் மாலை வரை காவல் காத்துக் கொண்டு உட்கார்ந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது: வெளியே சென்று பார்த்தால் கூட்டணிக்கு கட்சி தலைவர்கள் யாரும் வரவில்லை. ஐஸ் விற்கிறவர்கள் தான் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு அதிமுக கட்சியை பால்படுத்திவிட்டார். தொண்டர்கள் விட மாட்டார்கள். தொண்டர்களுக்கும் இயக்கத்திற்கும் துரோகம் செய்தால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது. இழிவு நிலைக்கு தள்ளப்படுவார். கட்சி கொடியை வேட்டியை பயன்படுத்தக்கூடாது, பேனர் வைக்க கூடாது என்று கூறுகிறார்கள்.

தொண்டர்கள் அடித்து விரட்டுவார்கள்: ஆனால் அதிமுக தொண்டர்கள் எங்களிடம் ஓடுவது அதிமுக இரத்தம். இந்த இரத்தத்தை உறிஞ்சிவிட்டு வேறு இரத்தம் பாய்ச்ச முடியாது. அதனால் மீண்டும் தொண்டர்கள் தான் எல்லாம் என்ற நிலை வரும். பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் இல்லை என்றால் தொண்டர்கள் அடித்து விரட்டுவார்கள்.

திமுகவும் அதிமுகவும் கூட்டணியோ?: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குற்றவாளிகளை 3 மாதத்தில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 36 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அனைவரிடமும் சந்தேகம் வருகிறது. ஒரு படத்தில் சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்னு சொல்வதை போல வேறு எங்கும் இல்லாத வகையில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டும்” என்று பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, “ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமையை அராஜகத்தின் மூலமும் வன்முறை மூலமும் தடுக்கின்ற எடப்பாடி பழனிசாமியை தொண்டர்கள் விரட்டி அடிப்பார்கள். பத்திரிகையாளர்களிடம் சொல்லி விட்டு கூட்டணி பேச்சுவார்த்தை தான் நடத்துவோம். தலைசிறந்த ஆட்சியை நடத்தி காட்டிய பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

பாஜக தலைமையிலேயே தேர்தல்: அதற்காகத்தான் 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும், அசம்பாவித கொடுமைகளும் நடக்கவில்லை. உத்தரபிரதேசத்தில் கூட சிறுபான்மையின மக்கள் நம்பிக்கை வைத்து அவர்களை வெற்றியடைய வைத்தது தான் வரலாறு. நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் என்பது தான் அதன் முடிவாக இருக்கும்.

இந்திய அளவில் தேசிய கட்சியாக தனி பெரும்பான்மையுடன் வரக்கூடிய நிலைமை பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சி தான் தலைமை வகிக்கும். அதனால் பாஜக தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தல் சந்திப்போம். சட்டமன்ற தேர்தலில் தான் மாநில கட்சி தலைமை வகிக்கும். அதன்படி தான் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். பொதுவாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கின்றோம்.

சசிகலாவிடம் அரசியல் பேசவில்லை: இரண்டு தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டியிடுவதாக கேட்டு உள்ளது. ஆதாரபூர்வமாக உண்மையாக தனக்கு தெரியவில்லை. அண்ணா நினைவு தினத்தன்று சசிகலாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். எந்த ஒரு அரசியலும் பேசவில்லை. 64 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்க கூடியது. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற நிலை வரும் பொழுது அந்த சூழலில் எந்த சின்னத்தில் நிற்பது என்று பார்த்துக் கொள்ளலாம்.

கனவு உலகத்தில் எடப்பாடி: பத்தாண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்ததால் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைவரும் எண்ணுகின்றனர். மோடியா லேடியா என்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கூறியதை தற்பொழுது பேச முடியுமா?. ஓபிஎஸ், டி.டி.வி தினகரன், சசிகலா ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்தபோது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்தோம்.

அதற்காக அப்போது கண்டன அறிக்கையும் விட்டிருந்தோம். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தால் அப்போது அவரை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உரிமைகளை மீட்கின்ற குழுவாக எங்கள் குழு வெற்றி பெறும். எங்களுக்குள் ஆதங்கம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. நாங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. அவர் கனவு உலகத்தில் சஞ்சரிக்கிறார். நாங்கள் என்ன செய்ய முடியும்.

எடப்பாடி கூறுவது சுத்த பொய்: எங்கள் தலைமையில் உள்ள உரிமை மீட்புக் குழுவில் உள்ள தொண்டர்கள் பொதுமக்கள் பாஜகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஐந்து இடங்களா 10 இடங்களா முப்பது இடங்களா என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு தான் தொகுதிகளை கேட்போம். 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது சுத்த பொய். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு படிவம் எழுதி பூர்த்தி செய்தால் எப்படி உறுப்பினர்களாக சேர்க்க முடியும்.

குறுக்கு வழியில் பதவி பெறவில்லை: எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே சட்டமன்ற விதிகளின் படி உள்ளது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி என்பது விதியின் படி கிடையாது. அதனால் தற்பொழுது நான் அந்த பதவி இல்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே சட்டமன்றத்தில் எனக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்டியை கட்ட முடியவில்லை என்ற மன வருத்தம் உள்ளது. 45 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்துள்ளேன்.

விசுவாசத்திற்கு எந்த நிலையில் இருந்து, ஒரு தொண்டன் எப்படி பாடுபட வேண்டுமோ, அந்த நிலையில் இருந்து தான் கட்சிக்காக பாடுபட்டேன். தலைவர் என்ற நிலையில் இல்லை தொண்டன் என்ற நிலையிலேயே இருந்தேன். அனைத்து பதவிகளும் ஜெயலலிதா கொடுத்தது தான். நானாக குறுக்கு வழியில் சென்று எந்த பதவியையும் பெறவில்லை.

இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்: முதல் தர்மயுத்தம் நடத்தினோம். ஆனால் இன்று இருக்கக்கூடிய சூழல் யாரை எதிர்த்து தர்மம் யுத்தம் நடத்தினோமோ, அவர்கள் அனைவரும் அதிமுக தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்” என்று தெரிவித்தார்.

இதனிடையே அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியது, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவின் ஒரே சின்னமான இரட்டை இலைக்கு போட்டியிடும் பட்சத்தில், இந்திய தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்ன பயன்பாட்டை முடக்கிவிடும் வாய்ப்புகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “திமுக எப்படியோ அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி” - டிடிவி தினகரன் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.