ETV Bharat / state

"திமுகவை கெஞ்ச வைத்துவிட்டோம்" - ஜெயக்குமார் சொல்லும் அதிமுகவின் கூட்டணி கணக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 4:04 PM IST

Updated : Mar 4, 2024, 5:11 PM IST

Former ADMK Minister Jayakumar Criticizes on Prime Minister Modi Visit to Tamil Nadu
பிரதமர் மோடி தமிழக வருகை குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Prime Minister Modi visit to Tamil Nadu: பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் ஒரு பலனும் பாஜகவிற்குக் கிடைக்காது ஏனென்றால் இது திராவிட மண் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒருபகுதியாக சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, அதிமுக சென்னை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் ஊழல் ஆகியவற்றில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

DMK என்பது Drug Mafia Kazhagam என்று சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் போதைப் பொருள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் சீரழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால், ஆளும் கட்சியே போதைப் பொருள் விற்பனையை ஊக்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது.

ஜாபர் சாதிக் மீது தமிழகக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காது அவரை காப்பாற்றத் தான் முயற்சிக்கும். மத்திய அரசு தான் இதில் தலையிட்டு ஜாபர் சாதிக்கிடம் யார் யார் பணம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மைகளை வெளி கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்த அதிமுக போதைப் பொருள் புழக்கத்துக்கு எதிராகப் போராடுவது வேடிக்கையாக உள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் ஒன்றிரண்டு சம்பவம் நடந்திருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் நாள்தோறும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இதனை அடுத்து, பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் ஒரு பலனும் பாஜகவிற்குக் கிடைக்காது ஏனென்றால் இது திராவிட மண்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "திமுக கூட்டணி உடன்பாட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அங்கு உரிய சீட் கிடைக்காதவர்களுக்கு அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு ஒருவாய்ப்பு உள்ளது. அதிமுக, பாஜக-வை கூட்டணியிலிருந்து கழற்றி விட்ட பின் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளைக் கெஞ்சிக் கூத்தாடி தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என தெரியவில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வலியுறுத்தி நெல்லை காங்கிரஸ் சார்பில் தீர்மானம்!

Last Updated :Mar 4, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.