ETV Bharat / state

பேராவூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டமா? மயிலாடுதுறையில் 6வது நாளாக தேடுதல் பணி தீவிரம்! - Leopard Movement In Mayiladuthurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 12:33 PM IST

Leopard Movement In Mayiladuthurai
சிறுத்தை நடமாட்டம்

Leopard movement in Mayiladuthurai: காஞ்சிவாய் அடுத்த பேராவூர் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் 6வது நாளாக தேடுதல் பணி தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினர் தொடர்ந்து 5 நாட்களாக செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ரயிலடி என நகரைச் சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதியில் முகாமிட்டு, கூண்டுகளை வைத்து சிறுத்தையைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில், குத்தாலம் தாலுகாவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை சுற்றித் திரிந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில், நேற்று பாலையூர் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில், அங்கு பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானதை அடுத்து, அப்பகுதியில் 15 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து கணகாணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை வனத்துறையினர், கூண்டுகள் பொருத்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதில், சிறுத்தை நடமாட்டம் சிக்கவில்லை. இதனால், அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகளையும் எடுத்து, சிறுத்தை நடமாட்டம் குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையைப் பார்த்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் என 10 பேர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், மசினகுடியில் டி23 புலியைப் பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காளன் ஆகியோர், காஞ்சிவாய் அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்ற திண்டுக்கல் சீனிவாசனின் மகன்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.