ETV Bharat / state

மயிலாடுதுறையில் 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்.. வனத்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை! - Leopard Movement In Mayiladuthurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 2:12 PM IST

Leopard Movement In Mayiladuthurai
மயிலாடுதுறை சிறுத்தை

Leopard in Mayiladuthurai: மயிலாடுதுறையில் 5வது நாளாக கூண்டில் சிக்காமல் அப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையின் முடியுடன் கூடிய மலத்தை வனத்துறையினர் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இரவு சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியது. இதனால், சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட கூறைநாடு, செம்மங்குளம் பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சிறுத்தையைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் அடுத்த தூக்கணாங்குளத்தில் உள்ள கருவேலங்காடு பகுதியில் பதுங்கி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வனக் காவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், 16 தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து 3 ராட்சச கூண்டுகள், வலைகள், உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், கருவேலங்காட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி கேமரா மற்றும் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள குட்ஸ் யார்ட் நடைமேடையில் ஒரு ஆட்டினை சிறுத்தை கொன்றதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில், நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன் மயிலாடுதுறைக்கு வந்தார். கருவேலங்காட்டில் சிறுத்தை நடமாடிய பகுதியில், 8 மோப்ப நாய்கள் மற்றும் வேட்டை நாய்கள் மூலம், வனத்துறையினருடன் நேரில் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சென்சார் கேமராவில் பதிவாகியிருந்த சிறுத்தையின் புகைப்படத்தை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர்.

இதனையடுத்து, நேற்று இரவு ஆரோக்கியநாதபுரம், மயிலாடுதுறை ரயில்வே நிலையம், அசிக்காடு, மறையூர், கோவங்குடி, ஊர்க்குடி ஆகிய ஆறு இடங்களில் ஏழு கூண்டுகள் வைக்கப்பட்டு, சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், வைக்கப்பட்ட எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை. அப்பகுதிகளில் பொருத்தப்பட்ட எந்த கேமராக்களிலும் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே, ரயில்வே தண்டவாளம் பாலம் கீழே சிறுத்தையின் தடங்கள் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் நீலகிரி பொம்மன், காளன் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் எதுவும் தெரியாத நிலையில், காவிரி ஆற்றில் முடியுடன் கூடிய மலத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த மலம் சிறுத்தை மலம் போன்று இருப்பதால், வனத்துறையினர் அவற்றை மருத்துவப் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும்,சம்பவ இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்களில் உள்ள மெமரி கார்டுகளை எடுத்துச் சென்று, அதில் ஏதேனும் சிறுத்தையின் புகைப்படம் இருக்கிறதா என்றும் பார்வையிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல்; நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த திமுக வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.