ETV Bharat / state

மிக்ஜாம் புயல் நிவாரணம் எவ்வளவு? உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வழங்கிய தமிழ்நாடு அரசு - Michaung Cyclone flood relief fund

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 5:07 PM IST

flood-relief-fund-deposited-to-25-lakhs-beneficiary-accounts-state-tells-mhc
மிக்ஜாம் புயல் நிவாரணம் தொகை குறித்த விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு!

Michaung Cyclone flood relief fund: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ரூபாய் 25 லட்சம் குடும்பங்களுக்கு 1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையைச் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கக் கோரி முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவர் செல்வகுமார் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதமே வழங்கப்பட்டு விட்டதாகவும், நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சம் 28 ஆயிரத்து 933 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து 10 சதவீதம் என சுமார் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபர அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதி தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திமுக Vs பாஜக என மாறுகிறதா தேர்தல் களம்? - உண்மை நிலவரம் என்ன? - DMK VS BJP

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.