ETV Bharat / state

மீன் விற்பனை கூட்டுறவு சங்கம் முறைகேடா? சாலையில் மீன்களைக் கொட்டிய மேட்டூர் அணை மீனவர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 7:56 PM IST

சேலம்
சேலம்

Fishermen protest in Mettur: மேட்டூர் மீன் விற்பனை கூட்டுறவு சங்கத்தில், மீன்களை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மீனவர்கள் சாலையில் மீன்களைக் கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் மீன்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 77 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. அணையில் வளர்க்கப்படும் மீன்களைப் பிடிக்க சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்று உள்ளனர். மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை, அங்கு செயல்பட்டு வரும் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழு விற்பனை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்மைக்காலமாக மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆந்திரா மீன்களையும், ஏரி மீன்களையும் கொள்முதல் செய்து, மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி உள்ளிட்ட சிறிய வகை மீன்களை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யாமல், விடுமுறை நாட்களில் மட்டுமே மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து மீன்களையும் கொள்முதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக, விடுமுறை நாளான இன்று, மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்யாமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், "இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் மேட்டூர் அணையில் மீன்கள் பிடிக்க உரிமம் பெற்று உள்ளோம். இந்த ஒரு தொழிலை நம்பியே நாங்கள் 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில், மீனவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர்களிடம் மீன்களை கொள்முதல் செய்யாமல் லாப நோக்கில் செயல்படுகிறது. மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கம் மறுக்கிறது.

ஆனால், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் பிடிக்கப்படும் மீன்களையும், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன்களையும் கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மையங்கள் மூலம் கூட்டுறவு சங்கம் விற்பனை செய்து வருகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் காவல்துறையினர், அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து, மீனவர்கள் போராட்டத்தைத் கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

இதையும் படிங்க: என்னுடைய விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை.. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவேன் - அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.