ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தல்: திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன் செய்ததும், செய்யத் தவறியதும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 4:00 PM IST

Tiruppur Lok Sabha constituency
Tiruppur Lok Sabha constituency

Tiruppur MP k Subbarayan: நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி எம்பி கே.சுப்பராயன் விவசாய பிரச்சனைகளுக்காக களத்திற்கு வரவில்லை, திருப்பூர் பிரச்சனையை மத்திய அரசிடம் கொண்டு சேர்க்கவில்லை எதிர்தரப்பு கூறும் நிலையில் அதற்கு எம்பி சுப்பராயன் கூறிய விளக்கம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திருப்பூர்: விவசாயத்தையும், பின்னலாடை உள்ளிட்ட தொழில் வளத்தையும் சரிவிகிதத்தில் கொண்ட மாவட்டமாக திகழ்கிறது திருப்பூர். குறிப்பாக திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் ஆடைகள் தான், அந்த அளவிற்கு திருப்பூர் ஆடைகள் உலக அளவில் பிரபலமானவை. ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வரை அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் டாலர் நகரமாகவும் திருப்பூர் திகழ்ந்து வருகிறது.

பின்னலாடைத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி பல வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அடைக்கலமாக விளங்கி வருகிறது திருப்பூர். அதாவது பனியன் துறையை நம்பி கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு பாத்திரங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை தொகுதிகளில் விவசாயம் அதிக அளவில் நடைபெறும் பகுதியாகவும் விளங்கி வருகிறது.

தொகுதி நிலவரம்: வந்தாரை வாழவைக்கும் திருப்பூர் மாவட்டத்தில், 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதாவது திருப்பூர், வடக்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாக இருக்கிறது. இது தவிர திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியானது கோவை நாடாளுமன்ற தொகுதியிலும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியிலும்; தாராபுரம், காங்கயம் சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியிலும், அவிநாசி சட்டமன்ற தொகுதியானது நீலகிரி தொகுதியிலும் உள்ளது. இப்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்பது பலமுறை நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் 39வது மக்களவைத் தொகுதிகளில் 18வது தொகுதியாக திகழும் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆவார்கள். மொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்களே அதிகம்.

தமிழ்நாட்டின் 7வது மிகப்பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தொழில் நகரமாகும். கோவையுடன் இணைந்திருந்த திருப்பூர் 2008ஆம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு பணிகளின் பொழுது திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவானது.

அதற்கு முன்பாக, கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் என்ற 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு என்ற 2 சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் என்ற 4 சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

திருப்பூர் மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டு, இதுவரை 3 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக அதிமுக 2 முறை வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த செ.சிவசாமி 2 லட்சத்து 95 ஆயிரத்து 731 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்வேந்தனை (2,10,385) 83 ஆயிரத்து 346 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதையடுத்து, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கிய சத்தியபாமா 4 லட்சத்து 42 ஆயிரத்து 778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் களமிறங்கினர்.

அதில் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் போட்டியிட்டு, 5 லட்சத்து 825 வாக்குகள் பெற்றார், அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்எஸ்எம் ஆனந்தனை விட 93 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரசியலுக்காகவே தன்னை அர்ப்பணித்த எம்பி: திருப்பூர் அணைக்காடு பகுதியைச் சேர்ந்த மில் தொழிலாளியும், கம்யூனிச ஆதரவாளருமான குப்புசாமியின் மகன் கே.சுப்பராயன். 10ம் வகுப்பு வரை படித்திருக்கும் சுப்பராயன், 1969ஆம் ஆண்டு தனது 22வது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டவர். திருப்பூர் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், பனியன் தொழிலாளர் சங்கச் செயலாளர் என தனது பணியைத் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர், மாநிலத் துணைச் செயலாளர், அகில இந்திய தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளில் வகித்திருக்கிறார்.

கட்சிக்காக பலமுறை சிறை சென்றவர்: தற்போது 76 வயதாகும் கே.சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும் அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் துணைத் தலைவராகவும், பனியன் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 1970ல் தொடங்கி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். 1985, 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து 2004 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வெற்றிபெற்ற சுப்பராயன், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூரில் தோல்வியைத் தழுவினார். அதையடுத்து, 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திருப்பூரில் களமிறங்கி வெற்றியைக் கண்ட நிலையில் தற்போதைய தேர்தலிலும் அவரையே களமிறக்கியுள்ளது கட்சி மேலிடம்.

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான கே.சுப்பராயன், தொகுதிக்காக செய்தது என்ன?

நிதியில் மீதமே ரூ.300 தான்: இதுதொடர்பாக திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கூறுகையில், "இந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்கள் வழங்கிய மனு அனைத்துக்கும் நிதி ஒதுக்கி பணி செய்யவில்லை என்ற அதிருப்தி உள்ளது. அதற்குரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வழங்கும் நிதி என்பதை, ஒரு வருடம் ரத்து செய்துவிட்டார்கள், ஒரு வரும் பாதிதான் கொடுத்தார்கள். இத்துடன் மற்ற 3 வருடத்தில் கொடுத்த அனைத்தையும், மக்களின் குடிநீர் தேவை, மருத்துவ தேவை, 3 சக்கர வாகன வழங்க செலவழித்துள்ளேன். குறிப்பாக 8ம் வகுப்பு படிக்கக்கூடிய செவித்திறனற்ற மாணவிக்கு 6 லட்சம் செலவில் நவீன கருவியை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைந்தேன். நான் செய்த உதவிகளிலேயே, பெரிதும் மகிழ்ந்த உதவி இதுதான் என்றார்.

மேலும், அந்தியூரில் மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, பர்கூர் மலைப்பகுதியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி திருமண நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் தவித்த மக்களுக்காக சமுதாய கூடங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன் மற்றும் திருப்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாலைகள், வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள் என ஒரு பைசா கூட மிச்சம் இல்லாமல் பல திட்டங்களை கொண்டு சேர்த்திருக்கிறேன். தற்போது என்னுடைய கணக்கில் வெறும் ரூ.359 மட்டுமே மீதம் உள்ளது. மற்ற எல்லாமே மக்கள் நலப்பணிக்காக விநியோகிக்கப்பட்டு விட்டது" எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தவில்லை: விவசாயி சதீஷ்குமார் கூறுகையில், "திருப்பூர் எம்பி இங்கு நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து போதுமான கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து பேசியதற்கான தகவலும் இல்லை. இதுவரை விவசாய சங்கத்தினரை நேரில் வந்து பார்க்கவில்லை. விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கின்றோம் வந்து கலந்து கொள்ளலாம்.

கனிமம் தொடர்பாக விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது கூட பிரச்சனைகள் வெளிப்படையாக தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் திருப்பூர் எம்பி என்ற அடிப்படையில் போதுமான கவனம் செலுத்தவில்லை, களத்தில் இல்லை என்பது போலதான் தோன்றுகிறது. இன்னும் களத்திற்கு வரவேண்டும், மக்கள் பிரச்சனையை கேட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான முழு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஏனென்றால், எம்பி நினைத்தால் நேரடியாக முதலமைச்சரிடமும் பேசலாம், மாவட்ட நிர்வாகத்திடமும் பேசலாம். குறிப்பாக இங்கு குடிநீர் பிரச்சனைகள் போன்ற அடிப்படை வசதிகளில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. ஆனால், எம்பி அதில் கவனம் செலுத்தினாரா என்பது சந்தேகமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்திற்காக போராட்டத்தை மட்டும் நடத்தி வருகிறோம்: இது தொடர்பாக ஏற்றுமதியாளர் செந்தில்வேல் கூறுகையில், "திருப்பூர் எம்.பி சுப்பராயன் அவரது காலத்தில் என்ன பணிகள் செய்தார் என ஆக்கப்பூர்வமாகவோ, அறிக்கைப்பூர்வமாகவோ எங்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எங்களது வாழ்வை, தொழிலை நிலை நிறுத்திக் கொள்ள இதுவரை போராட்டங்களை மட்டும் செய்து வருகின்றோம். எங்குமே தீர்வு இல்லை.

பஞ்சு நூல் பிரச்சனை, பருத்தி நூல் ஏற்றுமதி கட்டுப்பாடு பிரச்சனை, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை என இது எதிலுமே எம்பி தீர்வு கிடைக்கும் படி செய்துள்ளார் என்பது கிடையாது. சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது, அதற்கு உண்டான நிவாரணத்தையும் வாங்கித் தரவில்லை. இந்த முறையாவது அரசியல் கட்சிகள் தொழில் துறையைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் எங்களது பிரச்சனையை எடுத்துச் சொல்ல முடியும் என நினைக்கிறோம்.

ஏனென்றால், ஒரு அரசியல் அமைப்புக் கட்சி, அவர்கள் கொள்கை ரீதியாக கூட்டணி தர்மத்திற்காகத்தான் செல்கிறார்கள். தொழிலாளர்களுக்கு, தொழிலுக்கு என்ன பிரச்சனை என்பதை எடுத்துச் சொல்வது இல்லை. தீர்வை நோக்கி போவதும் இல்லை. தற்போதுள்ள எம்பியால் எங்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகையால் வருங்காலம் என்ன பதில் சொல்லுகிறது எனப் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு திருப்பூரில் நிலவும் பிரச்சனை குறித்து எதுவுமே தெரியாதா?: இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி வருகிறோம். முன்னாள் எம்.பி, இனிவரும் எம்.பி எப்படி இருக்கவேண்டும் என நாம் சொல்லவேண்டியது இல்லை. எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்லலாம். திருப்பூர் தொழில்துறையைப் பொறுத்தவரை, ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடி வர்த்தகம் நடத்துகிறோம்.

வந்தாரை வாழ வைக்கும் நகரம்தான் திருப்பூர். ஏனென்றால், உலகளவில் வேலை வாய்ப்பு அதிகம் வழங்குவது திருப்பூர் கார்மெண்ட் தொழில்தான். திருப்பூர் என்றாலே லிட்டில் இந்தியா, அப்படிப்பட்ட ஊரில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆகையால் பின்னலாடை தொழிலை செய்ய முடியாமல் வெளியேற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த பாதிப்பை மத்திய அரசிடம் மக்கள் பிரதிநிதி கொண்டு போய் சேர்க்கவில்லை.

2021ல் உள்நாட்டுச் சந்தையில் நூல் தட்டுப்பாடு காரணமாக பெரியளவில் விலையேற்றமானது. பஞ்சு விலையேற்றத்தால் நூல் விலையேறியது. அதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் எங்களால் எழுந்திரிக்க முடியவில்லை. தற்போது காட்டன் ஆடைகளுக்கு போட்டியாக பாலியஸ்டர் ஆடைகளை சந்தைப்படுத்தும் நிலை வந்துவிட்டது. பின்னலாடை தொழிலின் அடையாளம் என்பதே எங்களுக்கு பருத்தி ஆடைதான், ஆனால் தற்போது பருத்தி ஆடை திருப்பூரை விட்டு வெளியே போவது போன்ற சூழல் ஆகிவிட்டது. முதலில் இத்தொழிலுக்கு போட்டி நாடுகள் தான் இருந்தது, ஆனால் தற்போது போட்டி மாநிலங்கள் உருவாகிவிட்டது.

இதெற்கெல்லாம் முக்கிய காரணம், அந்ததெந்த காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதியாக இருந்த எம்பிக்கள் மத்திய அரசிடம் போராடி எங்களுக்கு தேவையானதை பெற்றுத் தந்திருந்தால் நாங்கள் தப்பியிருப்போம். ஆனால் மத்திய அரசுக்கு இப்பிரச்சனை பற்றி ஒன்றுமே தெரியவில்லை எனக் கூறுகின்றனர். பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஜவுளி தொழில் நன்றாக உள்ளது என சில இடங்களில் கூறுகிறார். அதேபோல, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திருப்பூரைப் போல 75 திருப்பூர் உருவாக்க வேண்டும் எனக் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் திருப்பூரும், இங்குள்ள தொழிலும் நன்றாக உள்ளது என அவர்கள் எண்ணிக் கொண்டுள்ளனர். எம்எஸ்எம்இ பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்கவே இல்லை. அதனை இங்குள்ள எம்பியும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தெரியப்படுத்த வேண்டும். யாருமே சொல்லவில்லை என்றால் பின்னலாடை தொழிலின் பாதிப்பு எப்படி மத்திய அரசுக்கு தெரியும். இதற்கு முழு காரணம் மக்கள் பிரதிநிதியான எம்.பி பிரச்சனைகளை சரியான முறையில் கொண்டு சேர்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.

திருப்பூர் எம்பியை பாதி பேருக்குத் தெரியாது: கரோனா பாதிப்பு, ஜிஎஸ்டி, பருத்தி விலையேற்றம் காரணமாக திருப்பூரில் 80 சதவிகிதப் பின்னலாடைத் தொழில் சரிவைச் சந்தித்திருக்கிறது. திருப்பூரின் மார்க்கெட்டை வங்கதேசம் கைப்பற்றி வருகிறது. கடந்த காலத்தைக் காட்டிலும் அங்கிருந்து துணிகள் இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. பின்னலாடைத் துறைக்கான ஊக்கத் தொகையை குறைத்தது, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகளைக் களைய எம்.பி சுப்பராயன் பெரிய அளவில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது மின்கட்டண உயர்வால் பின்னலாடை மற்றும் அது சார்ந்த துறைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. அது தொடர்பான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல சுப்பராயன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.

எம்.பி சுப்பராயன் செய்ததும், செய்யாததும்: கடந்த 5 ஆண்டுகளில், தொகுதிக்கென போராடி எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை எனவும், மத்திய அரசு ஒதுக்கிய திட்டங்கள்தான் வந்திருக்கின்றன எனவும், அவர் எம்.பியாக இருப்பதே திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாதிப் பேருக்குத் தெரியாது எனவும், பின்னலாடைத் துறையில் அரசுக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் திருப்பூரில் ஜி.எஸ்.டி, மின்கட்டண உயர்வு எனப் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றது எனவும், அது தொடர்பாக, ஆக்கபூர்வமாக சுப்பராயன் நாடாளுமன்றத்தில் பேசவேயில்லை எனவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

திருப்பூரைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்பதால், பெரிய அளவிலான திட்டங்களைப் பெற்றுத்தருவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநகராட்சிப் பகுதியில் உள்கட்டமைப்புக்காக எவ்விதத் திட்டத்தையும் சுப்பராயன் கேட்டுப் பெறவில்லை என்கிற அதிருப்தி வாக்காளர்களிடம் நிலவுகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்சனை, நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுநீரால் ஏற்படும் மாசு ஆகியவற்றைச் சரி செய்யவும் அவர் திட்டமிடவில்லை என்கிறார்கள் தொகுதி வாசிகள். பெருந்துறை சிப்காட்டிலுள்ள தொழிற் சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசுபடுவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் மக்களிடம் நேரில் குறைகளைக் கேட்டறிந்தார் சுப்பராயன். அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆனால், பர்கூர், அந்தியூர் மலைப்பகுதிகளில் அடிக்கடி சென்று மக்களைச் சந்திப்பது, அடிப்படை வசதிகளுக்காக அதிக நிதியை ஒதுக்கியது, கட்சிப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து செயல்பட்டது உள்ளிட்ட எம்.பியின் செயல்பாடுகள் பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது களம் காணும் வேட்பாளர்கள்:

சிபிஐ - சுப்பராயன்

அதிமுக - அருணாச்சலம்

பாஜக - ஏ.பி.முருகானந்தம்

நாதக - சீதாலட்சுமி

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.