ETV Bharat / state

"என்னை அதிமுகவில் புறக்கணிக்கின்றனர்" - நிகழ்ச்சியில் பாதியில் சென்ற முன்னாள் அமைச்சர்.. ஆரணியில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:10 PM IST

Updated : Feb 27, 2024, 3:55 PM IST

Arani ex Minister sevvoor Ramachandran walkout in admk meeting
பொதுக்கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முன்னாள் அமைச்சர்

Sevvoor Ramachandran: ஆரணியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அதிமுகவின் அமைச்சராகவும், 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன், ஆனால் என்னை புறக்கணிக்கின்றனர் என பேசிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆரணி அருகே உள்ள நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் போளூர் எம்.எல்.ஏ ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும், தற்போதைய ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன், "அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாட வலியுறத்தினார். ஆனால் மாவட்டம் சார்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா என்னை வேண்டுமென்றே சில நிர்வாகிகளை வைத்து, விளம்பரம், செய்திதாள், துண்டு பிரசுரம் ஆகியவற்றில் என் படத்தை போடாமல் என்னை புறக்கணித்து வருகின்றார்.

5 மாதத்திற்கு முன்பு நியமிக்கபட்ட மாவட்ட செயலாளர் ஆரணியில் உள்ள சில நிர்வாகிகளை என்படத்தை போட கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால் கிளைச் செயலாளர்கள் என் படத்தை போட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் சில நிர்வாகிகளை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்து கொண்டு எம்.எல்.ஏவை (என்னை) இருட்டடிப்பு செய்து வருகின்றார். 2 முறை எம்.எல்.ஏவாக உள்ள நான் மக்கள்மன்றத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்து வைக்கின்றேன்.

மக்களே தீர்ப்பு அளியுங்கள் எந்த இழப்பு வந்தாலும் உங்களை விட்டுபிரியமாட்டேன், நான் அதிமுகவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். மேலும் 5 வருடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், 2 முறை எம்.எல்.ஏவாகவும், 3 முறை உள்ளாட்சி பிரதிநிதியாகவும் இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன்.

வெறும் 17 லட்சம் தொண்டர் கொண்ட இந்த இயக்கத்தை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1 கோடி 50 லட்சம் தொண்டர்களாக உருவாக்கினார். அதை எடப்பாடி பழனிசாமி 2 கோடி 40 லட்சம் தொண்டர்களாக உருவாக்கி வருகிறார். அப்படிபட்ட இந்த இயக்கத்தில் மாவட்ட செயலாளர் எதற்கும் செவிசாய்க்காமல் துண்டு பிரசுரங்களிலும், பேனர்களிலும் என்னை வேண்டுமென்றே புறக்கணித்து வரும் மாவட்ட செயலாளர் ஜெயசுதாவை கண்டிக்கின்றேன்" எனத் தெரிவித்தார்.

அதனையடுத்து பொதுக்கூட்டத்தில் பேச்சை முடித்த சேவூர் ராமசந்திரன் மேடையிலிருந்து உடனடியாக இறங்கிச் சென்றார். அப்போது எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் திடீரென எம்.எல்.ஏவை சூழ்ந்து கொண்டு, எம்.எல்.ஏ வாழ்க வாழ்க... எனவும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஒழிக ஒழிக எனவும் கூறி மேடையிலிருந்து ஊர்வலமாக சிறிது தூரம் ஊர்வலமாகச் சென்றார். இந்த சம்பவம் பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞர் திடீர் மரணம்! நடந்தது என்ன?

Last Updated :Feb 27, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.