புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019, 2021, 2022 ஆண்டுகளில் வருமானவரித் துறையினர், அமலாக்கத் துறையினர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்று (மார்ச்.21) காலை முதல் மூன்று இன்னோவா கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த காலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை செய்து பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ குட்கா வழக்கு, அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது அமலாக்கத்துறை தேர்தல் நேரத்தில் சோதனை செய்து வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, வருமானவரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறதா அல்லது விஜயபாஸ்கர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல்கள் அமலாக்கத்துறை சோதனைக்குப் பின்பு தெரியவரும்.
மேலும், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்துவரும் நிலையில், அவரது வீட்டில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மற்றும் விஜயபாஸ்கரின் தாயார் மட்டுமே உள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 1 மணி நேரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பின்னர் முதல் முறையாக சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது தமிழக அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: ஜி-ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை...