ETV Bharat / state

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு: கல்வி உளவியலாளர் கூறும் ஆலோசனை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 6:57 PM IST

Educational Psychologist Saranya Jayakumar
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் கூறும் ஆலோசனைகள்

Educational Psychologist Saranya Jayakumar: பொதுத் தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வினை அச்சமின்றி எவ்வாறு எழுதுவது, தேர்விற்கு எவ்வாறு தயார் செய்வது, பெற்றோர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் கூறும் ஆலோசனைகள்

சென்னை: பொதுத் தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு அணுகுமுறை குறித்தும் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில், "10, 11 ,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு தற்போது செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்விற்கு இடையில் உள்ள குறுகிய காலத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். தேர்வினை எழுதும் பொழுது வெற்றி தோல்வி எது வந்தாலும், அதனை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

பொதுத் தேர்வினை எழுதக்கூடிய மாணவர்கள் கடைசி நேரத்தில் தயாராகும் போது பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், கையேடு போன்ற பல வகையில் படித்து மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட சோர்சில் இருந்து மட்டும் படிப்பது மிகவும் முக்கியம்.

மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுது 4 அல்லது 5 மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு மற்ற நேரம் படிப்பார்கள். ஆனால், படித்தவற்றைத் தேர்வில் நினைவுபடுத்தி எழுதுவதற்கு 7 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம். அதிலும் முக்கியமாக, சரியாக உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்களது கவனத்தைச் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் போது வீட்டில் டிவியை கட் செய்து விடுவார்கள். ஆனால் தற்பொழுது எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. மேலும், மாணவர்கள் 2 அல்லது 3 மணி நேரம் போன் பார்த்துவிட்டு மீண்டும் படிப்பதால் என்ன ஆகிவிடும் என நினைக்கின்றனர்.

ஆனால், படித்ததைத் தேர்வில் எழுதும் பொழுது தங்களுக்கு ஞாபகம் வர வில்லை என நிறையப் பேர் கூறுவதற்குக் காரணம் அதிக அளவில் செல்போன் மற்றும் டிவி பார்ப்பதும்தான். செல்போன் பயன்படுத்துவது மற்றும் டிவி பார்ப்பது தேர்வு நேரத்தில் முழுவதும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமானது.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பெற்றோர்களுக்கான சான்றிதழ் கிடையாது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் தாங்கள் குழந்தையை வளர்த்துள்ளோம் என கூறினால் அது சரியாக இருக்காது. அது போன்ற அழுத்தத்தைப் பெற்றோர்கள், மாணவர்கள் மீது செலுத்தாதீர்கள்.

தேர்வு என்பது தாங்கள் படித்தவற்றிற்கு ஒரு செக் பாயின்ட், அது வாழ்க்கையுடைய எல்லை கிடையாது, ஆரம்பம் தான். வாழ்க்கையின் ஆரம்பத்தில் வெற்றி அடைந்து விட்டால் நல்ல கல்லூரி கிடைக்கும். அதே நேரத்தில் தோல்வி அடைந்தாலும் அரசே மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறது. அதற்கு ஏற்ப நாம் தயார் செய்து எழுத வேண்டும்.

அதிலும் தோல்வி அடைந்து விட்டால் நம்மிடம் உள்ள சான்றிதழை வைத்து அடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தொழில் கல்வி கற்றுக் கொள்ள முடியும். எந்த வாய்ப்பை தேர்வுசெய்யப் போகிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த மதிப்பெண் பெற்றாலும் ஏதாவது ஒரு கல்லூரியில் உயர் படிப்பில் இடம் கிடைக்கும்.

இந்தியாவில் 70 நுழைவுத் தேர்வுகள் உள்ளது. அவற்றில் உங்களுக்கு எது தேவை என்பதைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நிறைய நாடுகள் வைத்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் ஒரு செக் பாயிண்டாக நீட் தேர்வு வைத்துள்ளனர்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றால் தான் இடம் கிடைக்கும் என்ற நிலைமை இன்று இல்லை. 60 சதவீதம் மதிப்பெண் பெற்றாலும் நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. தற்பொழுது நீட் தேர்வு இருக்கிறது அதற்கு மாணவர்களைத் தயார் செய்ய வேண்டும். டாக்டராக வேண்டுமென்றால் நீட் தேர்விற்கு உங்களால் முடிந்தவரைத் தயாராகி எழுதுங்கள். டாக்டர் தொழில் மட்டும் கிடையாது, அதைவிட அதிகமான வருமானம் மற்றும் மதிப்பும் கொடுக்கக்கூடிய தொழில்களும் ஏராளமாக உள்ளன." என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2024; வரலாற்றில் முதல்முறையாக பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.