ETV Bharat / state

“இடைநீக்கம் செய்த ஆசிரியரை மீண்டும் பணி அமர்த்துக” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 6:40 PM IST

aiadmk-general-secretary-eps-statement-about-government-teachers
அரசுக்கு எதிரான கருத்து; ஆசிரியை இடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

Edappadi K. Palaniswami Statement: அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக ஆசிரியை உமாமகேஸ்வரி இடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆசிரியர்களைத் தொடர்ந்து திமுக அரசு வஞ்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் பெற்றோருக்குப் பிறகு ஆசிரியப் பெருமக்களை குருவாக நிறுத்தி, பிறகுதான் தெய்வத்தை நமது முன்னோர்கள் வரிசைப்படுத்தினார்கள்.

அதிமுக ஆட்சியில், எதிர்காலச் சந்ததியினரை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கி, பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே, ஆசிரியப் பெருமக்களுக்கு அறிவித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், ஆசிரியை உமாமகேஸ்வரி என்பவர், கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு கட்டுரைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். அவற்றில் ஊடகம் சார்ந்த ஒரு வலைத்தளத்தில், கல்வித் துறையில் 15,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 1,200க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருப்பதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட 3,200 கோடி ரூபாய் அடிப்படை கட்டமைப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளதாகவும், ஆனால், ஆசிரியர் பணி நியமனம் குறித்த அறிவிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், இல்லம்தோறும் கல்வித் திட்டத்திற்கு பலநூறு கோடி ரூபாய் வீணாக செலவழிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரை விடியா திமுக அரசு தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன. தமிழக கல்விப் பணி சிறக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தனது கருத்தைக் கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அந்த ஆசிரியரை இடை நீக்கம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆசிரியை உமாமகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.