ETV Bharat / state

"கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய தமிழக முதலமைச்சர் வெளிநாடு பயணம்" - இபிஎஸ் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 7:10 PM IST

EPS Accused TN CM
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வெளிநாடு செல்லும் தமிழக முதலமைச்சர்

EPS Accused TN CM: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார் என தமிழக் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வெளிநாடு செல்லும் தமிழக முதலமைச்சர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வல்லம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (ஜன. 28) சுமார் 70 அடி உயரக் கொடிக்கம்பத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பு பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வைக் கண்டோம். இனி அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தார்கள். அழிந்து போனார்கள். இந்த இயக்கத்தைக் கெடுக்க நினைத்தார்கள். கெட்டுப் போனார்கள். திமுக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.

ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி இன்றைய முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிற பொம்மை முதலமைச்சர். 100% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பொய்யைச் சொல்லி முழு பூசனிக்காயைச் சோற்றிலே மறைக்கிறார்.

இது விஞ்ஞான உலகம் யாரையும் ஏமாற்ற முடியாது. திமுக குடும்ப கட்சி, குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும் என்ற குறிக்கோள். மக்களைப் பற்றி கவலை இல்லை. அது கட்சி அல்ல கார்ப்ரேட் கம்பெனி. இரண்டு ஆண்டுக் கால திமுக ஆட்சியில் கொள்ளையடிப்பது தான் குறிக்கோள். கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக இன்றைக்கு வெளிநாடு சென்றிருக்கிறார் முதலமைச்சர்.

முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்றால் அண்மையில் நடந்த சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கலாம். முதலீட்டைக் கொண்டு வரப் போகவில்லை. இந்த ஆண்டு டெல்டா விவசாயிகளுக்குக் குறுவை, சம்பாவுக்குத் தண்ணீர் பெற்றுத் தரவில்லை. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர் சேகர், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஏராளமான மகளிர் அணியினர் எடப்பாடி பழனிசாமியை மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் சார்பில், எடப்பாடி பழனிசாமிக்குப் பச்சை துண்டு போர்த்தி ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து விவசாயிகளின் ஏர் கலப்பை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், திருவிடைமருதூர் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட பாஜகவினர் மீது தாக்குதல்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.