ETV Bharat / state

நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:19 PM IST

நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
நந்தனத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ED Raid: மணல் குவாரி ஒப்பந்ததாரரான கரிகாலன் என்பவரின், சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி, கோயம்புத்தூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், மணல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாயை, அரசுக்கு கணக்கு காட்டாமல் மறைத்து முறைகேடு நடத்தியதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனைகள் மேற்கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சோதனை முடிவில் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்துக்கள், 250 மணல் அள்ளும் இயந்திரங்கள் உள்பட 128 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். மேலும், மணல் குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த வாரம் சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இரண்டரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மணல் குவாரி ஒப்பந்ததாரரான கரிகாலன் என்பவரின் சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள வீட்டில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கரிகாலனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், தற்போது மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஏற்கனவே சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யச் செல்லும்போது, அவர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைத்து அதிகாரிகள் சென்றனர்.

அதனை அடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சீலை அகற்றி, மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும், மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், இந்த சோதனை தற்போது நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிய வந்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் முழு விவரங்களும், கைப்பற்ற ஆவணங்கள் குறித்தும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பற்கள் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 14 பேர் ஆஜராக நீதிபதி உத்தரவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.