ETV Bharat / state

ஆருத்ரா - ஹிஜாவு - ஐஎஃப்எஸ் மோசடிகளுக்கு ஒரே ஏஜெண்ட் மூளையாகச் செயல்பட்டதாக தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:31 PM IST

aarudhra scam
ஆருத்ரா மோசடி

Aarudhra scam: ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் போன்ற நிதி நிறுவன மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்டது ஒரே ஏஜென்ட்கள்தான் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை: தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, பல கோடி ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள் உள்ளிடவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி விவகாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமார்ந்து போய் உள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி, மாதம் 3 ஆயிரம் கட்டினால் 5 ஆயிரம் என கவர்ச்சிகரமான சலுகைகளைக் கூறி மக்களிடம் பல ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்த ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதில் தொடர்புடைய நபர்கள் ஆகியோர் தலைமறைவாகினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிக்கும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிறுவனங்களில் மோசடியில் ஈடுபடுவதற்கு மூளையாகச் செயல்பட்டது ஒரே ஏஜெண்டுகள்தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தொடங்கப்படும்போது, அந்தந்த நிறுவனங்கள் ஏஜெண்டுகளுக்கு கமிஷன் கொடுத்து 100 முதல் 200 நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வைக்க வேண்டுமென தெரிவித்ததன் அடிப்படையில், இந்தப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து, அந்த ஏஜெண்டுகள் அதிகப்படியான வருமானங்கள் ஈட்டியதுடன், வேறு நிறுவனத்திற்குச் சென்று, இதே போன்று அங்கேயும் மக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்ததுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

100 முதல் 200 நபர்களை மோசடி நிறுவனத்தில் இணைத்துவிட்டு, மீண்டும் வேறு ஒரு மோசடி நிறுவனத்திற்குச் சென்று அங்கேயும் இதே ஆட்களைக் கொண்டு சேர்த்ததும் ஒரே ஏஜென்ட்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் மோசடி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஏஜென்ட்கள் மூலம் தங்கள் நிறுவனங்களை பெருக்குவதற்காக இது போன்ற மோசடிகளில் ஈடுபட வைத்து ஏஜென்ட்களுக்கு கமிஷன் கொடுக்கும் வேலையிலும் ஈடுபட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது போன்ற வேலைகளில் ஈடுபட்ட ஏஜென்ட்கள் யார் என்பது குறித்த விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன் லண்டன் செல்ல விசா கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.