ETV Bharat / state

நெல்லையில் பாஜகவைக் கண்டித்து திமுக அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 2:07 PM IST

Nellai DMK: தமிழக மக்களை பல்வேறு கோரிக்கைகளில் பாஜக அரசு ஏமாற்றியதாகவும், வரும் தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு அல்வா கொடுப்பார்கள் என்பதை வலியுறுத்தி, அல்வா வழங்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: மத்திய அரசு, தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல் புறக்கணிப்பதைக் கூறி, நெல்லை டவுண் ஈசான முக்கில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மக்களுக்கு அல்வா வழங்கும் நூதன போராட்டம் இன்று (பிப்.8) நடைபெற்றது. அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால், மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியது. ஆனால், இன்று வரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மோடி எய்ம்ஸ் கல்லூரிக்காக நட்டிய ஒற்றைச் செங்கல்லை வைத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து, திமுக அரசு ஆட்சிக்கும் வந்துவிட்டது.

மோடி அரசிற்கு கொஞ்சமாவது உணர்வு இருந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் என்கிற சொரணை ஏற்பட்டு, கொஞ்சமாவது நிதி வழங்கி எய்ம்ஸ் கல்லூரியைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் மோடி அரசின் ஆயுட்காலமே முடியப் போகிறது. இதுவரையிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த மழை வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்து படம் போட்டார். வெள்ள நிவாரணத்திற்காக சல்லி பைசா கூட தரவில்லை.

ராஜ்நாத் சிங், நேரடியாக வந்து பார்வையிட்டார். அதன்பின், மத்திய அரசின் அதிகாரிகள் நேரில் வந்து வெள்ளத்தை பார்வையிட்டனர். ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மத்திய அரசிடம் கெஞ்சவில்லை, மாநில உரிமையைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார்.

ஏறத்தாழ 6 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணத்தை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. மத்திய அரசு 1 ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு கொடுக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு ரூபாய் செலுத்தும் வரிக்கு, 2 ரூபாயாக திருப்பிக் கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. இதைப்போன்று, மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றி அல்வா அளித்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் மக்களும் பாஜகவிற்கு ஒரு இடம் கூட வெற்றி வாய்ப்பு அளிக்காமல் அல்வா தரப் போகிறார்கள். அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த நூதன போராட்டம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம் குறித்து கேட்டபோது, இது குறித்து அவர் பேசுவது பித்தலாட்டம் என்றும், அது குறித்து நிர்மலா சீதாராமனின் கணவரே தெளிவாகக் கூறியுள்ளதாகவும், அதைக் கேட்டு நடந்தால் நல்லது என்றும் விமர்சித்துப் பேசினார்.

மேலும், முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம் குறித்து அண்ணாமலை வெள்ளை அறிக்கை கேட்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அவருக்கு வெள்ளை அறிக்கை எல்லாம் தர முடியாது, வெள்ளரிக்காய்தான் வாங்கித் தர முடியும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: ஸ்பெயின் பயணம் மூலம் தமிழகத்திற்கான முதலீடு?, விஜய் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.