ஈரோடு: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை, எரகனள்ளி, கல்மண்டிபுரம், கரளவாடி, சிமிட்டஹள்ளி, மல்குத்திபுரம் தொட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதோடு, இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள மல்கொத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவண்ணா, அவர் வளர்த்து வந்த பசு மாட்டை, அவரது விவசாயத் தோட்டத்தில் கட்டி வைத்துள்ளார். அப்போது பலத்த இடி தாக்கியதில் பசுமாடு உயிரிழந்துள்ளது. இதையடுத்து மாடு உயிரிழந்த தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று, குடிநீர் தேடி அங்கும் இங்கும் அலைந்தபோது, வழி தவறி அருளவாடி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து கிராமத்திற்குள் புள்ளிமான் நடமாடுவதைக் கண்ட தெரு நாய்கள் புள்ளி மானை துரத்த தொடங்கியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் புள்ளி மானை பாதுகாப்பாக பிடித்து கட்டி வைத்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், புள்ளி மானை மீட்டுச் சென்று அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.