ETV Bharat / state

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்! - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 5:33 PM IST

Etv Bharat
Etv Bharat

AIADMK complaint against CM MK Stalin: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தேர்தல் விதிகளை மீறியதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை புகார் மனு அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, அதனை மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீறி உள்ளார்.

அதனால் தான் அவர் மீது புகார் அளித்துள்ளோம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கோயம்புத்தூரில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்போம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கும் படியும் புகார்கள் அளித்துள்ளேன். மேலும், முதலமைச்சரின் இது போன்ற அறிவிப்பினால் தேர்தல் நியாயமாக நடைபெற வழிவகுக்காது. ஆகையால், இந்த தேர்தலை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊடகங்கள் மூலம் வெளியிட்டது. இதன் மூலம் அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தேர்தல் காலங்களில் 110 சி.ஆர்.சி விதியின்படி குற்ற வழக்கு தொடர்புடையவர்களை காவல்துறையினர் அழைத்து கடிதம் எழுதி பெற்றுக் கொள்வார்கள். ஆனால், தற்போது அதிமுகவினரை மட்டும் அழைத்து, இது போன்ற கடிதங்களை எழுதி வாங்கிக் கொள்கின்றனர். ஏன் திமுகவைச் சேர்ந்தவர்கள் ரவுடிகளாக இல்லையா? அவர்களின் மீது எந்த வழக்கும் இல்லையா?

மதுபானக் கடையின் மூலம் வரும் வருவாய், தினந்தோறும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா என்ற கேள்வி எழும்புகிறது. டாஸ்மாக் கடை வருமானத்தை வைத்து ஆளுங்கட்சி தேர்தல் செலவினத்தில் ஈடுபடுகிறது. தொடர்ந்து திமுக செய்யும் குற்றங்களை குறித்து தேர்தல் ஆணையத்தின் புகார் அளித்து வருகிறோம்.

இந்த புகாரின் மீது முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்கவில்லை என்றால், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளோம். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “சேலத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது” - உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.