ETV Bharat / state

மைவி3 நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார்.. நிறுவனத்துக்கு ஆதரவாக நெடுஞ்சாலையில் குவிந்த முதலீட்டாளர்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 2:52 PM IST

Myv3ads
Myv3 Ads நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார்

Myv3ads: மைவி3 என்ற நிதி மற்றும் டிரேடிங் நிறுவனம் மீது கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவில் மோசடி புகார் பதியப்பட்ட நிலையில், நிறுவனத்திற்கு ஆதரவாக நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் முதலீட்டாளர்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.

Myv3 Ads நிறுவனம் மீது கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு Myv3 Ads என்ற செயலி செயல்பட்டு வருகிறது. யூடியூப் சமூக வலைத்தளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களைச் சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதில், 360 ரூபாய் முதல் 1 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி 5000க்கும் அதிகமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்குக் கூறியபடி மாதம் மாதம் பணம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து என்பவர் கோவை சைபர் க்ரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், நிறுவனத்தின் மீது கோவை சைபர் க்ரைம் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நிறுவனத்திற்கு ஆதரவாகக் கோவை மாவட்டம், நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் குவிந்தனர்.

அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கோட்டாட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமையால் ரியல் எஸ்டேட் ஓனர் தற்கொலை.. காவல் துறை மீது உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு.. திடீர் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.