ETV Bharat / state

குப்பையுடன் மாமன்ற கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள்! கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 6:36 PM IST

குப்பைக்கூடைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்;
குப்பைக்கூடைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்;

Coimbatore Corporation meeting: கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் கைகளில் குப்பை கூடைகளுடன், வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

குப்பைக்கூடைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்;

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகிய 3 பேரும் கைகளில் குப்பைக்கூடைகளுடன், தனியாருக்கு குப்பை எடுக்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், வீடு வீடாக குப்பை எடுக்காத நிலையில் எதற்கு வரி வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், "2 மாதங்களுக்கு பிறகு இன்று (பிப். 5) மாமன்ற கூட்டம் நடத்தப்படுகின்றது. குப்பைகளை எடுக்க தனியாருக்கு 170 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் குப்பைகளை ஒழுங்காக எடுப்பதில்லை. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது.

குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை எனில், கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். டெண்டர் விடப்பட்ட தனியார் நிறுவனம், குப்பை எடுக்க போதுமான வாகனங்களை பயன்படுத்துவதில்லை. யாரோ ஒரு தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகின்றது" என்று தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் 109 பொருள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 102-வது பொருளாக, மாநாகராட்சி பகுதியில் தொழில், வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் வலியுறுத்தியதை அடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் சிறுவாணி அணையில் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால், குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது.

ஆகவே அணையின் நீர்மட்டத்தை குறைக்க கேரளா அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பேசிய மேயர், கல்பனா இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், அமைச்சரிடம் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; பிப்.12 முதல் தொடர் போராட்டம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.