தென்காசி: அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகி, பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வெளியில் வரத் தயங்கி வருகின்றனர். மேலும், வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலைக்குச் சென்று வருவோர், தங்களை வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக கரும்புச்சாறு, இளநீர் போன்ற பானங்களை அருந்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தென்காசியில் உள்ள மக்கள், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்திலிருந்து இளைப்பாற, மரத்தடியில் விவசாயிகள் இளநீர் கடைகளை அமைத்துள்ளனர். அதேபோல், வியாபாரிகள் தற்காலிக கரும்புச்சாறு பிழியும் எந்திரம் மூலம் கரும்புச்சாறுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தற்பொழுது இளநீர், கரும்பு, தர்பூசணி போன்ற பானங்கள் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், கரும்பு விளைச்சல் அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாக காணப்படுகிறது. செங்கோட்டை, தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்களும், எலுமிச்சை சாகுபடிகளும் அதிகமாக உள்ள பகுதியாக காணப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விதமான இடங்களில் 100 சதவீதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், மக்கள் அதிகப்படியான இயற்கை பானக்கடைகளை தேடி சற்று இளைப்பாறிச் செல்கின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு விதமான இயற்கையாக விளையக்கூடிய இளநீர் மற்றும் கரும்புச்சாறுகளை பெரும்பான்மையானவர் தேடித் தேடிப் பயன்படுத்தி வருவதன் காரணமாக, இளநீர் விவசாயிகள், கரும்புச் சாறு வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
அதேநேரம், தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பகுதிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலால், அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் இருந்து குற்றாலம் வந்த நபர் ஒருவர் கூறுகையில், “வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இளநீர், கரும்பு ஜூஸ் போன்றவற்றை குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த கடைகள் இருப்பதால் மக்கள் மிகவும் பயனடைகின்றனர். மக்கள் குளிர்பானங்களைத் தவிர்த்து, இயற்கை பானங்களை தேர்வு செய்து குடிக்க வேண்டும்” என்றார்.