ETV Bharat / state

பாமக, விசிகவினர் மோதல்; திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் பதற்றம்.. போலீசார் தடியடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 9:44 AM IST

clashs between pmk vs vck in tindivanam mayana kollai festival
திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலம் பாமக, விசிகவினர் மோதல்

Tindivanam Mayana Kollai Festival: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக, விசிகவினர் மோதலில் ஈடுபட முயன்றதை அடுத்து, போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: திண்டிவனம் - செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கோலாகலமாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக அம்மன், காளி வேடம் அணிந்து அங்காளம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக சென்றனர்.

இதில் திண்டிவனம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தனர். இந்நிலையில், அப்போது ஊர்வலமாகச் சென்ற போது காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டின் அருகே சென்ற விசிகவினர் சிலர், அக்கட்சியின் கொடியைக் கட்டிக்கொண்டு நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த பாமகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே அப்போது திடீரென மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் மாறி மாறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட முயன்றதால், போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அப்போது, தப்பியோடிய இளைஞர்கள் சிலர் போலீசார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் மண்டையில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் நடத்திய இந்த தடியடியால், திண்டிவனம் மயானக் கொள்ளை திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, மேலும் அசம்பாவிதம் நடக்காத வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மிரட்டலான வேடங்களுடன் நடைபெற்ற வேலூர் மயான கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.